பெங்களூர் மொய் விருந்தில் ரூ.40 லட்சம் வசூல் செய்த கெஜ்ரிவால்
பெங்களூர்: பெங்களூரில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய மொய் விருந்தில் ரூ.40 லட்சம் வசூல் ஆனது.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய நகரங்களில் மொய் விருந்து நடத்தி வருகிறார். இந்த விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்டால் ஒரு பிளேட் உணவு வெறும் ரூ.20 ஆயிரம் மட்டுமே. ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் ஆம் ஆத்மி கட்சியின் மொய் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விருந்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருந்தில் ரூ.40 லட்சம் வசூலானாது.
விருந்து நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் கெஜ்ரிவால் கூறியதாவது,
டெல்லியில் தேர்தல் நடக்க உள்ளபோது இவர் எதற்காக இங்கு விருந்து நிகழ்ச்சியை நடத்துகிறார் என்று நீங்கள் வியக்கலாம். டெல்லியில் நடப்பது நாட்டின் பிற பகுதிகளில் பிரதிபலிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
சனிக்கிழமை டெல்லியில் பாஜக பேரணி நடத்தியது. கூட்டத்திற்கு 1 லட்சம் பேர் வருவார்கள் என்றார்கள். ஆனால் 30 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே வந்தனர். 2 ஆயிரத்து 500 பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பேருந்துக்கு 12 பேர் தான் வந்துள்ளனர். அவர்களின் பேச்சில் இருந்தே அவர்கள் பயத்தில் உள்ளனர் என்பது தெரிகிறது.
நாங்கள் ஆட்சி செய்த 49 நாட்கள் பற்றி பாஜக ஒரு குறை கூட தெரிவிக்கவில்லை. அப்படி என்றால் நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்தோம் என்று பாஜகவே நினைக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications