தாயை மணக்க 3 அப்பாவி குழந்தைகளை சாக்கடையில் வீசி கொன்ற நபர்
பெங்களூர்: பெங்களூரில் பெண் ஒருவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவரின் 3 குழந்தைகளை சாக்கடையில் வீசியில் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள கே.ஜி.ஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நஜிமா பேகம். அவரது குழந்தைகள் சுல்தான்(4), அப்ரீன்(6) மற்றும் அஃப்னான்(8). நஜிமாவின் கணவர் ஓராண்டுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். இதையடுத்து நஜிமா குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியனான பாஹீம் பைக் என்பவருக்கும், நஜிமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பைக் நஜிமாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் நஜிமா ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளின் தாய் என்பதால் பைகின் வீட்டில் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பைக் கடந்த 27ம் தேதி நஜிமாவின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்து வந்த குழந்தைகளை அழைத்துச் சென்று சாக்கடையில் தள்ளி கொலை செய்தார். குழந்தைகளை காணாமல் நஜிமா தேடினார். பின்னர் இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரும் குழந்தைகளை தேடினர். போலீசாருக்கு பைக் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து விசாரித்தபோது அவர் குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.