அசத்தல்: பெங்களூரில் துவங்கிய 'ஹெலிடாக்சி' சேவை.. டிராபிக்கில் சிக்காமல் பறந்தே ஏர்போர்ட் போகலாம்
Recommended Video

பெங்களூர்: பெங்களூர் நகரின் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல வசதியாக ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட்டுள்ளது.
பெங்களூர் நகரின் வடக்கு பகுதியில் நகரை விட்டு தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்.
தெற்கு பகுதியிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி, தென்கிழக்கு பகுதியிலுள்ள ஒய்ட்பீல்டு போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகள், விமான நிலைய பகுதியில் இருந்து வெகு தூரம்.

அதிக நேரம்
கெம்பேகவுடா விமான நிலையம் செல்ல அரசு ஏசி பஸ்கள் அல்லது சொந்த வாகனங்கள் அல்லது வாடகை கார்களைதான் தெற்கு பெங்களூரில் வசிக்கும் விமான பயணிகள் நம்ப வேண்டியுள்ளது. இந்த பகுதிகளில் இருந்து ஏர்போர்ட் செல்ல குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து ஒருவர் சென்னை செல்ல பெங்களூர் விமான நிலையம் செல்லும் நேரத்திற்குள், காரில் அதே நபர் வேலூரை தாண்டிவிடலாம்.

ஹெலிடாக்சி
இந்த நிலையில், Thumby Aviation என்ற நிறுவனம், பெல் நிறுவனத்தின் 407 வகை ஹெலிகாப்டர்களை டாக்சி போல விமான நிலையத்திற்கு இயக்குகிறது. இதன் மூலம் எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 15 நிமிடங்களில் விமான நிலையத்தை சென்றடைய முடியும். காலை 6.30 மணி முதல் 9.30 மணிவரை ஒரு ஷிப்ட் என்றும் மாலை 3 மணி முதல் 6.15 மணிவரை மற்றொரு ஷிப்ட் என்றும் தலா 3 ரவுண்டுகள் இயக்கப்படுகிறது.

சேவை துவக்கம்
ஹெலிடாக்சி சேவை இன்று முதல் துவங்கியுள்ளது. இரு வாரங்களில் ஹெச்ஏஎல் பழைய விமான நிலையத்தில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு ஹெலிடாக்சி சேவை துவங்க உள்ளதாம். ஒரு ஹெலிகாப்டரில் அதிகபட்சமாக 6 பேர் பயணிக்க முடியும். 15 கிலோ வரையிலான லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி உண்டு. அதற்கும் மேல் லக்கேஜ் என்றால் தரைமார்க்கமாக கொண்டு வந்து பயணியிடம் சேர்க்கப்படும். அதற்கு கூடுதல் கட்டணம் உண்டு. ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஒரு பயணிக்கு ரூ.4130 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைக்கு செல்வந்தர்கள்தான் ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்த வாய்ப்புள்ளது.

ஒரே டிராபிக் ஜாம்தான்
பெங்களூர் நகரின் மேலும் பல்வேறு பகுதிகளிலும் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் அனுமதி தேவைப்படுகிறது. அது கிடைத்ததும், மேலும் பல பகுதிகளில் இருந்தும் ஹெலிகாப்டர் இயக்கப்படும். எனவே நகரிலுள்ள போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்ப மக்கள் 'ஹெலிடாக்சி' சேவையை அதிகம் உபயோகிக்க துவங்குவார்கள் என நம்பலாம்.












Click it and Unblock the Notifications