ஜனாதிபதி காரை வாங்கிய ஜெயலலிதா வரி கட்ட காலதாமதம் செய்தது ஏன்? நீதிபதி கேள்வி
பெங்களூர்: ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் அதற்கான வரியை செலுத்தாதது ஏன் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிவடைந்துவிட்ட நிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நேற்று 20வது நாளாக வாதங்களை முன்வைத்தார். அவர் கூறும்போது, 1992ம் வருடம் செப்டம்பரில், ஜனாதிபதியிடம் இருந்து வாங்கப்பட்ட காருக்கு 1993-94ம் நிதி ஆண்டில் வருமான வரி செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா, 1992ம் ஆண்டு செப்டம்பரில் வாங்கிய காருக்கு 1992-93ம் ஆண்டே வருமான வரி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக செலுத்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஜெயலலிதா வங்கிக் கணக்கில் அவ்வப்போது 50 லட்சம் ரூபாய், ஒரு கோடி ரூபாய் என்று டெபாசிட் செய்துள்ளாரே. இந்த பணம் எப்படி வந்தது என்று கூற முடியுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வாதம் இன்றும் தொடர்ந்து நடந்துவருகிறது.