மதிய உணவில் பல்லி விழுந்தது... பார்த்த அதிர்ச்சியிலேயே 3 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
பெங்களூர்: உணவில் பல்லி விழுந்ததை பார்த்த அதிர்ச்சியிலேயே பெங்களூர் பள்ளி மாணவிகள் மூன்று பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பெங்களூரை அடுத்த ராமநகர் மாவட்டம் கும்பலுகூடு அருகே கூலிக்கெரே கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடம் ஒன்றிற்கு நேற்று மதியம் தொண்டு நிறுவனம் ஒன்று மதிய உணவு வழங்கியது. உணவை மாணவ-மாணவிகளுக்கு பரிமாற எடுத்து வந்த போது, எதிர்பாராதவிதமாக சுவரில் நின்ற ஒரு பல்லி உணவில் விழுந்து விட்டது.
திடீரென பல்லி துள்ளி உணவில் விழுந்ததைக் கண்டு அங்கு உணவருந்த அமர்ந்திருந்த மாணவிகள் அலறினர். இந்நிலையில், அங்கிருந்த 3 மாணவிகளுக்கு வாந்தியும், மயக்கமும் உண்டானது.
உடனடியாக அம்மூன்று மாணவிகளும் மருத்துவமனை அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப் பட்டது. பல்லி விழுந்ததைப் பார்த்த அதிர்ச்சியிலேயே அவர்களுக்கு வாந்தியும், மயக்கமும் உண்டானதாக அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்குப் பின் அம்மாணவிகள் பத்திரமாக வீடு திரும்பினர்.
உணவில் பல்லி விழுந்ததை முன்கூட்டிய்யே பார்த்து விட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதிய உணவு சாப்பிட இருந்த நேரத்தில் பல்லியால் உண்டான களேபரத்தால் அப்பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.