மாற்றான் மனைவி மீது காதல்: ஐடி நிறுவன உயர் அதிகாரி குத்திக் கொலை
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த ரேஷ்வின் என்பவர் தன்னுடன் வேலை பார்த்த உயர் அதிகாரியின் மனைவி மீது கொண்ட காதலால் அந்த அதிகாரியை குத்திக் கொலை செய்துள்ளார்.
பெங்களூரில் உள்ள ஜென்பேக்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் கணவன் மனைவியான சவ்ரப் ரஸ்தோகி(35), அன்கிஷா ரஸ்தோகி. அதே நிறுவனத்தில் துணை மேனேஜராக இருந்த ரேஷ்வின் செங்கப்பா(26) என்பவருக்கு மூத்த மேனேஜரான சவ்ரபின் மனைவி மீது காதல் ஏற்பட்டுள்ளது. அன்கிஷாவும், ரேஷ்வினும் செல்போனில் அதிக நேரம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கின்றனர்.
இந்நிலையில் வரும் 27ம் தேதி சவ்ரப் தனது மனைவியுடன் அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டார். அன்கிஷாவை பிரிய மனமில்லாத ரேஷ்வின் பொருட்களை பேக் செய்ய உதவுவதாகக் கூறி இன்று சவ்ரபின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் சவ்ரபை கத்தியால் பலமுறை குத்தியதுடன் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
சம்பவம் நடந்தபோது அன்கிஷா புனேவில் இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேஷ்வினை கைது செய்தனர். மேலும் அன்கிஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷ்வின் சவ்ரபை கொலை செய்த பிறகு அன்கிஷாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். இந்த கொலையில் அன்கிஷாவுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று போலீசார் கருதுகின்றனர்.