700 பேரை மஃப்டியில் இறக்கி அடாவடி ஆட்டோ டிரைவர்களை மடக்கிய பெங்களூர் போலீஸ்!
பெங்களூர்: பெங்களூரில் 700 போக்குவரத்து போலீசார் சாதாரண உடை அணிந்து, ஆட்டோக்களில் பயணிகள் போல பயணித்து, அடாவடியாக கட்டணம் கேட்டது, பேசியததற்காக ஆட்டோ டிரைவர்களை பிடித்து வழக்குப் பதிவு செய்து அசத்தியுள்ளனர்.
பெங்களூரில் ஆட்டோ டிரைவர்களில் நல்லவர்களும் உள்ளார்கள், கெட்டவர்களும் உள்ளார்கள். நீங்கள் நினைத்த இடத்திற்கு அவர்கள் வர மாட்டார்கள். அவர்கள் செல்லும் வழியில் நீங்கள் போகும் இடம் இருந்தால் வருவார்கள்.
அருகில் உள்ள இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மீட்டர் போடாமல் இரண்டு மடங்கு கட்டணம் கேட்பார்கள். முடிந்த வரை ஊர் சுற்றி அழைத்துச் செல்வார்கள். சாலை சரியாக இல்லை என்றால் நம்மை தான் திட்டித் தீர்ப்பார்கள். ஏதோ நாமே ரோடு போட்டது போன்று.
செம “கட்டையுடன்” டிரைவர்கள்
சில ஆட்டோ டிரைவர்கள் உருட்டுக்கட்டையுடன் திரிகிறார்கள். இந்நிலையில் தான் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
700 போலீசார்
100 பெண் போலீசார் உள்பட 700 போக்குவரத்து போலீசார் கடந்த திங்கட்கிழமை பெங்களூரின் பல்வேறு இடங்களில் சாதாரண உடையில் ஆட்டோவில் பயணித்தனர்.
சவாரி
போலீசார் அதிகாலை 6 மணியில் இருந்து தொடர்ந்து 15 மணிநேரம் பல்வேறு இடங்களில் ஆட்டோவில் ஏறினர். அவர்கள் இந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிகளில் ஆட்டோ டிரைவர்களிடம் பேசினர்.
அடாவடி
பயணம் செய்வது மஃப்டியில் இருக்கும் போலீசார் என்று தெரியாமல் பல ஆட்டோ டிரைவர்கள் வழக்கம் போல் அந்த இடத்திற்கு வர முடியாது, கூடுதல் கட்டணம் தருகிறாயா என்று கூறியதுடன் திட்டியும் உள்ளனர்.
வழக்கு
அடாவடித்தனம் செய்தது, ஓட்டுநர் உரிமத்தை ஆட்டோவில் வைக்காதது, சீருடை அணியாதது என்று பல்வேறு காரணங்களுக்காக 3 ஆயிரத்து 360 ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
450 ஆட்டோக்கள் பறிமுதல்
அவர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது. மேலும் 450 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரு நாள் தானா?
போக்குவரத்து போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை அந்த ஒரு நாளோடு முடியவில்லை. இனி அடிக்கடி இப்படி ஆட்டோ டிரைவர்களை பரிசோதிக்கப் போகிறார்களாம்.
என்ன திடீர் என்று?
தன்னை ஒரு ஆட்டோ டிரைவர் தாக்கியதாக 22 வயது மனித உரிமை ஆர்வலரான ஒரு பெண் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது தீயாக பரவிவிட்டது. மேலும் அந்த பெண் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தான் போலீசார் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர்.
பெங்களூர் மக்கள்
போக்குவரத்து போலீசாரின் இந்த ஒரு நாள் நடவடிக்கையை பார்த்த பெங்களூர் மக்கள் அவர்களுக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னை போலீஸும் ரவுண்டு வந்தால்..!
அப்படியே சென்னை போலீஸும் ஒரு ரவுண்டு அல்ல அல்ல.. சில பல ரவுண்டுகள் வலம் வந்தால் சிங்காரச் சென்னையும் சந்தோஷப்படும்.!