பெங்களூரில் ஆம் ஆத்மி கட்சியினரை தாக்கிய 3 மர்ம நபர்கள்
பெங்களூர்: பெங்களூரில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் அடையாளம் தெரியாத 3 பேரால் தாக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல்லந்தூரில் உள்ள சென்ட்ரல் மால் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் உறுப்பினராவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தினர். மால் அருகே ஒரு போஸ்டரை வைத்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஆம் ஆத்மி கட்சியினருடன் அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
யாரிடம் அனுமதி வாங்கி போஸ்டர் வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள் என்று கேட்ட அந்த 3 பேர் திடீர் என்று கட்சியினரை தாக்கினர். அதில் ஒருவர் பங்கஜ் என்ற ஆம் ஆத்மி கட்சிக்காரரை கம்பால் அடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் அந்த 3 பேர் மற்றும் அவர்கள் வந்த பைக்கை புகைப்படம் எடுத்த கட்சியினர் அதை ஹெஸ்.எஸ்.ஆர். லேஅவுட் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் கொடுத்தனர். போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.