பெங்களூரில் சினிமா பாணியில் துணிகர சம்பவம்.. ஓடும் பஸ்சுக்குள் பயணியை வெட்டிக் கொன்ற கும்பல்!
பெங்களூர்: ஐடி தலைநகரமான பெங்களூரில் ஓடும் பஸ்சுக்குள் வைத்து ஒரு பயணி குத்தியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சினிமா பாணியில் நடந்துள்ள இந்த துணிகர சம்பவம் நகர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்ற சீதாராமன் (45). பெங்களூரின் ஹொஸ்கோட் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை ஆனேக்கல்-கே.ஆர்.மார்க்கெட் மார்ககத்தில் செல்லும் பெங்களூர் நகர பேருந்து ஒன்றில் அத்திபெலே பகுதியில் ஏறியுள்ளாார்.
எலக்ட்ரானிக்ஸ் சிட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட கோனேன அக்ரஹாரா பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பஸ்சில் பயணித்த 3 பேர் தங்கள் கைப்பையில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால், சுரேஷை கத்தியால் குத்தியும், அரிவாளாள் வெட்டவும் ஆரம்பித்தனர்.
அந்த பகுதியில் ரத்தம் தெறித்தது. சுரேஷின் மரண ஓலமும், ரத்த வெள்ளமும் பிற பயணிகளை பீதிக்குள்ளாக்கியது. அதற்குள்ளாக டிரைவ் சஞ்சீவை மிரட்டிய கொலையாளி ஒருவர் பஸ் கதவை திறக்கச் சொன்னார். டிரைவரும் அப்படியே செய்ய 3 கொலையாளிகளும் அங்கிருந்து தப்பியோடினர்.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷை அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், சுரேஷ் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குடும்ப தகராறு அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் இக்கொலை நடந்திருக்கலாம் என்றும் கொலையாளிகள் அவரது உறவினர்கள்தான் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கொலை செய்தவர்களில் ஒருவருக்கு சுமார் 60 வயதும், பிற இருவருக்கும் சுமார் 25 வயதும் இருக்கும் என போலீசாரிடம் சக பயணிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சுரேஷை பல நாட்களாக கொலையாளிகள் தேடி வந்த நிலையில், அத்திபெலே பகுதியில் இருந்து அவரை பினதொடர்ந்து வந்து பஸ்சில் வைத்து கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. பீதி காரணமாக பயணிகள் யாருமே கொலையாளிகளை பிடிக்க முயற்சி செய்யவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையான சுரேஷுக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பூக்கள் விற்பனை செய்கிறார்களாம்












Click it and Unblock the Notifications