முதல் தவணையாக ரூ.4000 கோடி.. மல்லையா கோரிக்கையை நிராகரித்தன வங்கிகள்!
டெல்லி: வங்கிக்கடனில் ரூ.4000 கோடியை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் திருப்பியளிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா கோரிக்கை விடுத்த நிலையில், இதை ஏற்க வங்கிகள் மறுத்துவிட்டன.
எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல வங்கிகளில் விஜய் மல்லையா ரூ.9000 கோடி அளவுக்கு கடன் வாங்கியுள்ளார். மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்குமாறு வங்கிகள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மல்லையா நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் கடந்த மாதம் 30ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மல்லையா தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார். செப்டம்பர் மாதத்திற்குள், வங்கிக்கடனில் ரூ.4000 கோடியை திருப்பி அனுப்ப மல்லையா சம்மதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மல்லையாவுக்கு எதிராக மீடியாக்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இங்கு மீடியாக்களின் விசாரணைதான் நடக்கிறது. இப்போது மீடியாக்கள் உருவாக்கி வைத்துள்ள பதற்றமான சூழ்நிலைக்கு நடுவே, மல்லையா நாடு திரும்ப விரும்பவில்லை என்றும் கூறினார்.
இதையடுத்து, மல்லையாவின் உறுதி மொழி குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் தாக்கல் செய்ய வங்கிகளுக்கு கோர்ட் உத்தரவிட்டது. மேலும், மீடியாக்கள் மல்லையா வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறுதான் செய்தி வெளியிட்டன. இதற்காக குற்றம் சொல்ல முடியாது என்றும் கோர்ட் கூறிவிட்டது. வழக்கு விசாரணை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவில், மல்லையாவின் கோரிக்கையை தாங்கள் ஏற்க முடியாது என்று கூறிவிட்டன. இதனால் கடன் தொகையை திருப்பி செலுத்தும் விவகாரத்தில் மல்லையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் 21ம் தேதிக்குள், மல்லையா தனது சொத்து, மனைவி, குழந்தைகளின் பெயரிலுள்ள சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications