தலித்துகள், பழங்குடியினரை கோயிலுக்குள் அனுமதிக்காவிட்டால் கடும் தண்டனை: சட்டம் நிறைவேறியது
டெல்லி: தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக லோக்சபாவிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பிறகு சட்டம் அமலுக்கு வர உள்ளது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்திருத்த மசோதா ராஜ்யசபாவி ல் தாக்கல் செய்யப்பட்டு எந்த விவாதமும் இன்றி, குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவுகளின்படி, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, பாலியல் எண்ணத்தோடு பெண்களைத் தொடுவது, பாலியல் சார்ந்த வார்த்தைகளையும் சைகைகளையும் தெரிவிப்பது, அந்தப் பெண்களை கோயில்களுக்கு தேவதாசிகளாக ஒப்படைப்பது, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், செருப்பு மாலைகள் அணிவிப்பது, சடலங்களை அப்புறப்படுத்துமாறோ அல்லது மனித மலங்களை அள்ளுமாறோ கட்டாயப்படுத்துவது, அந்த மக்கள் மீது சமூகம், பொருளாதாரம் சார்ந்த தடைகளை விதிப்பது, குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சட்டவிரோதமாக மிரட்டுவது ஆகிய நடவடிக்கைகளும் கடுமையான குற்றங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்குப் பணியாற்ற மறுக்கும் பிற சமூகங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தலித் அல்லது பழங்குடியின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்தால், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க இச்சட்டம் வகை செய்கிறது.












Click it and Unblock the Notifications