ஹைதராபாத்தில் கின்னஸ் சாதனை… 40 நாடுகளை சேர்ந்த் 9,292 பெண்கள் கலந்து கொண்ட 'பதுக்கம்மா விழா'
ஹைதராபாத்: தெலுங்கானாவில் கொண்டாடப்படும் பதுக்கம்மா பண்டிகை, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அந்த விழாவில் ஒரே இடத்தில் அதிக அளவிலான பெண்கள் கூடியதற்காக அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
நவராத்திரியின் போது, தெலுங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா பண்டிகை கொண்டாடப்படும். அப்போது, ஒரு தட்டின் நடுவில் கலசம் வைத்து, அதை சுற்றி வண்ணமயமான பூக்களை அடுக்கி அலங்கரிப்பர். பின்னர் அதை, பொது இடத்தில் வைத்து, சுமங்கலி பெண்கள் கும்மியடித்து பாடல் பாடுவர்.

நவராத்திரி விழாவின், எட்டாவது நாளில் கொண்டாடப்படும் பதுக்கம்மா பண்டிகையை அரசு விழாவாக கடந்த ஆண்டு தெலுங்கானா அரசு அறிவித்தது. இந்த ஆண்டு பதுக்கம்மா பண்டிகை ஹைதராபாத் லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
கின்னஸ் சாதனைக்காக அரசு சார்பில் 20 அடி உயரமுள்ள பதுக்கம்மா ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு வகையான பூக்களைக் கொண்டு அலங்கரித்திருந்தனர். அதன் முன், 9,292 பெண்கள், இரண்டு மணி நேரம் கும்மி அடித்து, ஆடி, பாடி, கின்னஸ் சாதனை படைத்தனர்.
இதற்கு முன்பாக கடந்த 2015ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓணம் நடனத் திருவிழாவில் 5,015 பெண்கள் கலந்துகொண்டிருந்ததே சாதனையாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உள்துறை அமைச்சர் நரசிம்ம ரெட்டி, சுற்றுலாத்துறை அமைச்சர் சந்துலால் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications