பெங்களூர் மாநகராட்சியை கைப்பற்றியது காங்.-ம.ஜ.த கூட்டணி! மேயரானார் மஞ்சுநாத் ரெட்டி
பெங்களூர்: பெருநகர் பெங்களூர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தலின்போது, தனிப்பெரும் கட்சியாக உருவாகியிருந்த பாஜகவுக்கு எதிராக காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் கை கோர்த்து வெற்றி பெற்றன. இதனால் மாநகராட்சி மேயராக காங்கிரசை சேர்ந்த மஞ்சுநாத் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
198 வார்டுகளை கொண்ட பெருநகர் பெங்களூர் மாநகராட்சிக்கு (BBMP) நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 100 வார்டுகளை வெற்றி கண்டு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 76 சீட்டுகளையும், ம.ஜ.த 14 சீட்டுகளையும் வென்றன. பிறர் 8 சீட்டுகளை வென்றனர்.

மாநகராட்சியில் மேயர் பதவி மற்றும் துணை மேயர் பதவியை கைப்பற்ற 131 வாக்குகள் தேவை. ஏனெனில், மேயர் தேர்தலில் பெங்களூரை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள் மற்றும் ராஜ்யசபா, மக்களவை எம்.பிக்களும் வாக்களிக்க தகுதியுடையவர்களாகும்.
இந்த அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகள் இணைந்து மாநகராட்சியை கைப்பற்றிவிட முடியும். இதை கருத்தில் கொண்டுதான், கவுன்சிலர்கள் அல்லாத பிறர் வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்று கூறி ஹைகோர்ட்டில் பாஜக மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார். அதேநேரம், தேர்தல் முடிவுகள், வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் அதற்கும் மாநகராட்சி உட்பட்டே ஆக வேண்டும்.
இந்நிலையில்தான், மிகுந்த பரபரப்புக்கு இடையே இன்று மதியம், 12 மணியில் இருந்து 1 மணிக்குள் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. முன்னதாக கவுன்சிலர்கள் 198 பேரும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதன்பிறகு மேயர் வேட்பாளராக காங்கிரசை சேர்ந்த மஞ்சுநாத ரெட்டி, துணை மேயராக ம.ஜ.தவை சேர்ந்த ஹேமலதா கோபாலய்யா ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். பாஜக சார்பில் மஞ்சுநாத் ராஜு மேயர் பதவிக்கும், நாகரத்னா துணை மேயர் பதவிக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து வாக்குப்பதிவு ஆரம்பித்தது. இதில் 131 வாக்குகளை பெற்று மஞ்சுநாத ரெட்டி வெற்றி பெற்றார். மொத்தம் 260 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருந்தனர். அதில் விஜய் மல்யாவை தவிர்த்த 259 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 1 சுயேச்சை தவிர்த்து 7 சுயேச்சைகள் காங்கிரசுக்குதான் வாக்களித்துள்ளனர். எனவே பெரும்பான்மை வாக்கு பெற்ற மஞ்சுநாத ரெட்டி வெற்றி பெற்றார். இவர் மடிவாளா வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications