மாப்பிள்ளை இவர்தான், ஆனா சட்டை அவரோடது இல்லை.. பெங்களூர் மாநகராட்சியில் இதுதான் பாஜக நிலை!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூர் மாநகராட்சியில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், மேயர் மற்றும் துணை மேயர் பதவியை அக்கட்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் (மஜத) இணைந்து கூட்டணி அமைத்து, மேயர் மற்றும் துணை மேயர் பதவியை தங்கள் கட்சி கைப்பற்ற வியூகம் அமைத்துள்ளன.
எனவே, மாப்பிள்ளை இவர்தான் (பாஜக) ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை (மேயர்) என்னுடையது என்று காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் சொல்லும் நிலை உருவாகியுள்ளது.

பாஜக 100 இடங்கள்
பெங்களூர் மாநகராட்சியின் 198 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 100 வார்டுகளை வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சி 76 சீட்டுகளையும், மஜத 14 சீட்டுகளையும் வென்றது. சுயேச்சைகள் 8 வார்டுகளில் வெற்றி பெற்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகத்தை பாஜக பிடித்துள்ளது.

எம்.எல்.ஏக்களுக்கும் வாக்குரிமை
இந்நிலையில், அந்த நிர்வாகத்தை நிர்வகிக்கும் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற வேண்டியது அவசியம். இதில்தான் சுவாரசியம் உள்ளது. ஏனெனில் மேயர் அல்லது துணை மேயர் பதவிக்கான வேட்பாளர்களை மாநகராட்சி கவுன்சிலர்கள், பெங்களூர் நகரிலுள்ள 28 சட்டசபை தொகுதி எம்.எல்.ஏக்களும், பெங்களூர் நகர 3 மக்களவை தொகுதி எம்.பிக்களும், பெங்களூர் நகரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேலவை உறுப்பினர்களும், வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டியது கட்டாயம்.

128 வாக்குகள் வேண்டும்
மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர் வெற்றி பெற 128 வாக்குகள் வேண்டும். பாஜகவுக்கு 100 கவுன்சிலர்கள், 12 எம்.எல்.ஏக்கள், 3 எம்.பிக்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் பலம் உள்ளது. அனைத்தையும் சேர்த்தால் 124 வாக்குகள் கிடைக்கும்.

எந்த கட்சிக்கும் இல்லை
காங்கிரசுக்கு 76 கவுன்சிலர்கள், 13 எம்.எல்.ஏக்கள், மேலவை உறுப்பினர்கள் என மொத்தம் 101 வாக்குகள் உள்ளன. மஜதவுக்கு 14 கவுன்சிலர்கள், 3 எம்.எல்.ஏக்கள், மேலவை உறுப்பினர்கள் என மொத்தம், 21 வாக்குகள் உள்ளன.
எந்த ஒரு கட்சிக்குமே 128 வாக்குகள் என்ற மேஜிக் நம்பர் கிடைக்காது.

காங்கிரஸ்+மஜத கூட்டு
இந்நிலையில்தான், காங்கிரஸ்-மஜத இணைந்து மேயர் மற்றும் துணை மேயர் பதவியை பிடிக்க திட்டமிட்டுள்ளன. இவ்விரு கட்சிகளும் இணைந்து வாக்களித்தாலும், காங்கிரசின் 101 மற்றும் மஜதவின் 21 வாக்குகள் இணைந்தால் 122 வாக்குகள்தான் கிடைக்கும். பாஜகவை விட 2 வாக்குகள் குறைவானதாகும் இது. ஆனால், 8 சுயேச்சைகள் வாக்குகளை காங்கிரஸ்+மஜத பெற்றால் வாக்கு எண்ணிக்கை 130 ஆகிவிடும். மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களாக காங்கிரசும், மஜதவும் நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறுவார்.

திடீர் சந்திப்பு
இந்த திட்டத்தோடு, மஜத எம்.எல்.ஏ, ஒய்.எஸ்.வி.தத்தா (தேவகவுடாவின் வலது கரம்) நேற்று இரவு முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசி காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைப்பது குறித்து பேசிவருகிறார். ஏற்கனவே சித்தராமையா மற்றும் தேவகவுடா இருவருக்கும் உரசல் உள்ளது. தேவகவுடா மகன் குமாரசாமிக்கும் சித்தராமையாவுக்கும் ஆகாது. இதனால் சித்தராமையா தயங்கினாலும், ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் மஜத உறுதியாக உள்ளதாம். இதனால் காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஷ்வருக்கும் தூதுவிட்டுள்ளது.

சுயேச்சைகளுக்கு டிமாண்ட்
அதேநேரம், சுயேச்சைகளில் 4 பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், பாஜக மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை தக்க வைத்துக்கொள்ளும். எனவே சுயேச்சைகளுக்கு தற்போது டிமாண்ட் ஏறியுள்ளது. அவர்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் வேறு வகைகளிலும் சுயேச்சை எம்.எல்.ஏக்களை மடக்கும் முயற்சி தொடங்கியுள்ளது. இதை தடுக்க பாஜக வியூகம் வகுக்கிறது. இதனால் பெங்களூர் தேர்தல் களம் உச்சகட்ட சூட்டிலுள்ளது.












Click it and Unblock the Notifications