சிபிஐ ரெய்டு.. மோடியைவிட நிதீஷ்குமார் மீதுதான் லாலுவுக்கு அதிக கோபம்.. ஏன் தெரியுமா?
லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டபோது சட்டம்- ஒழுங்கு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
டெல்லி: லாலு பிரசாத் யாதவின் வீட்டில் சிபிஐ சோதனையின்போது முதல்வர் நிதீஷ்குமாருக்கு பிரதமர் அலுவலகம் தெரிவித்தது என்ன? என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு லாலு பிரசாத் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் ஹோட்டல்களுக்கு டெண்டர்கள் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகனும், பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் ஆகியோருக்கு சொந்தமான 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

ராஜகிரி சென்றது ஏன்?
இதனிடையே லாலுவின் வீட்டில் ரெய்டு நடந்தபோது முதல்வர் நிதீஷ்குமார் ராஜகிரியில் இருந்தது தெரியவந்தது. மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் எம்எல்ஏ-க்களை சந்தித்து ஆதரவு கோரும் கூட்டத்தை தவிர்க்கவே அவர் ராஜகிரி சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது.

நிதீஷுக்கு தெரியும்
ஆனால் உண்மையை சொல்ல போனால், லாலு பிரசாத் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட போது சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வராமல் பார்த்துக் கொண்டவர் முதல்வர் நிதீஷ்குமார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், லாலு பிரசாத்தின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தப்படுவது குறித்து முன்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் ஏதும் வழங்கப்படவில்லை. இதனால் நேற்று சோதனை நடத்தப்பட்டபோது சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏதேனும் ஏற்படலாம் என்று சிபிஐ அதிகாரிகள் கருதினர். இதை எங்கள் அலுவலகத்திலும் தெரிவித்தனர்.

பிரதமர் அலுவலகம் தொடர்பு
இதைத் தொடர்ந்து எங்கள் அலுவலக அதிகாரிகள் நிதீஷை கடந்த வியாழக்கிழமை தொடர்பு கொண்டனர். அப்போது அவரிடம் லாலுவின் வீட்டில் நடக்கவிருந்த ரெய்டு குறித்து தகவல்களை தெரிவித்ததோடு, சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்தும் எடுத்துரைத்தனர்.

பாதுகாப்புகள் தீவிரம்
இதன்பேரில் ரெய்டு நடைபெறும் போது எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறக் கூடாது என்று காவல் துறை உயரதிகாரிகளுக்கு நிதீஷ்குமார் உத்தரவிட்டார். இதன்பேரில் போலீஸார் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். கூட்டணி ஆட்சியில் பங்குபெற்றுள்ள போதிலும் நிதீஷ் தன்னிடம் முன்கூட்டியே ரெய்டு பற்றி கூறவில்லையே என்ற கோபத்தில் உள்ளாராம் லாலு பிரசாத் யாதவ்.












Click it and Unblock the Notifications