சசிகலா 'அத்தை' சிறை தண்டனைக்குப் பின்னணியில் பெரிய சதி உள்ளது... சொல்கிறார் ஜெ. அண்ணன் மகன் தீபக்
சசிகலா அத்தையின் சிறை தண்டனைக்குப் பின் பெரிய சதித்திட்டம் உள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: சசிகலாவின் சிறை தண்டனைக்குப் பின் பெரிய சதி உள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பதால் அமைதியாக இருக்கிறோம் என்றும் தீபக் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவராசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அங்கிருந்தப்படியே கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசியை சந்தித்த தீபக்
இந்நிலையில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரனும் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கும் நேற்று சசிகலாவை பெங்களூரு சிறையில் சந்தித்தனர். பின்னர் அவர்கள் சென்னை புறப்பட்டனர்.

பின்னணியில் பெரிய சதி உள்ளது
அப்போது காரில் இருந்தபடியே ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, சசிகலா அத்தை சிறையில் இருப்பதற்கு பின்னணியில் பெரிய சதி உள்ளது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்பதால் அமைதி
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளதால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறோம் என்றார். மேலும் அவரது சகோதரியான தீபா குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என தீபக் கூறினார்.

ஆகாதவராய் போன தீபா
தீபக்கின் சகோதரியான ஜெ.தீபா ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தப்போதே சசிகலா குடும்பத்துக்கு ஆகாதவராய் போனார். இறுதிச்சடங்கில் கூட சசிகலா குடும்பம் தீபாவை அனுமதிக்கவில்லை.

தீபாவுக்கு ஆதரவு
இதைத்தொடர்ந்து தீபாவுக்கு அதிமுக தொண்டர்களிடையே ஆதரவு பெருகியது. அவர்கள் பல இடங்களில் தீபா பேரவையை தொடங்கினர்.

சசிகலா குடும்பத்துக்கு குடைச்சல்
இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரண்டாக பிரிந்த அதிமுகவின் ஓபிஎஸ் அணிக்கு தீபா ஆதரவு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்துள்ளார். இது சசிகலா தரப்புக்கு கூடுதல் குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், அவரது சகோதரர் தீபக் சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications