மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் போட்டியை வேடிக்கை பார்த்த முதியவர் பேட் பட்டு பலி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சிறுவர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கையில் தற்செயலாக கைநழுவி பறந்து வந்த பேட் பட்டு 58 வயது நபர் பலியாகியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் இருக்கும் பகவான்பூர் பிளாக்கில் உள்ளூர் சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று மாலை நடைபெற்றது. அந்த போட்டியை சஷான்க் மன்னா(58) என்பவர் கண்டு ரசித்துள்ளார்.
சிறுவன் ஒருவர் பந்து வீசியபோது பேட்டிங் செய்த சிறுவன் அதை அடிக்க முயற்சி செய்தார். அப்போது சிறுவனின் கையில் இருந்த பேட் நழுவி பறந்து சென்று மன்னாவின் தலையில் பட்டது. பேட் பட்டவுடன் மன்னாவின் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு வங்கத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது சக வீரருடன் மோதி காயம் அடைந்த வீரர் அங்கித் கேசரி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.