100வது பிறந்தநாள்.. 90 வயது மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்ட தாத்தா!
100 வயது தாத்தாவுக்கும், அவரது 90 வயது மனைவிக்கும் மீண்டும் திருமணம் நடத்தி வைத்து கொண்டாடியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.
கொல்கட்டா: தனது 100வது பிறந்தநாளை ஒட்டி, பேரப்பிள்ளைகள் முன்னிலையில் மீண்டும் தனது 90 வயது மனைவியை தாத்தா ஒருவர் திருமணம் செய்து கொண்ட வித்தியாசமான கொண்டாட்டம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.
25வது, 50வது, 75வது என திருமணநாளை விமர்சையாகக் கொண்டாடுவது போல், ஆண்களின் 60வதுபிறந்தநாளின் போது, 60வது கல்யாண நாளைக் கொண்டாடும் பழக்கமும் நம் மக்கள் மத்தியில் உள்ளது. 60 வயதாகி விட்டது, இத்தனை வருடங்கள் இருவரும் இணை பிரியாமல் ஒன்றாக குடும்பம் நடத்தி இருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் வகையிலும், அவர்களது திருமண வாழ்க்கை மற்ற இளம் ஜோடிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி திருமணங்கள் நடத்தப்படுகின்றன.
60 வயதுக்கே அப்படியென்றால் 100 வயது என்றால் சின்ன விசயமா என்ன? மேற்கு வங்கத்தில் தனது 100வது பிறந்தநாளையொட்டி, தனது 90 வயது மனைவியைத் தனது பேரப்பிள்ளைகள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார்.
70 வருட திருமண வாழ்க்கை
மேற்குவங்க மாநிலம் பாமுனியா கிராமத்தைச் சேர்ந்த 100 வயது முதியவர் பிஸ்வநாத் சர்க்கார். இவரது மனைவி சோரோத்வாணி சர்க்காருக்கு 90 வயதாகிறது. கடந்த 1973ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு மொத்தம் 6 குழந்தைகள், 23 பேரக்குழந்தைகள், 10 பூட்ட குழந்தைகள் இருக்கின்றனர். சமீபத்தில் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடினார் பிஸ்வநாத்.
குடும்பத்தினர் முடிவு
எனவே, அதனைக் கொண்டாடும் வகையில் பிஸ்வநாத் தம்பதிக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்தனர். சமூகவலைதளத்தில் இதே போல், 100 வயது தம்பதி ஒன்று திருமணம் செய்து கொண்ட செய்தியைப் பார்த்து, பிஸ்வநாத்தின் மருமகள் இந்தத் திருமணத்தை திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் வழக்கம்
மீண்டும் நடைபெறும் திருமணம் என்ற போதும், அதே பழைய சம்பிரதாய முறைப்படி புதிய திருமணம் போலவே அவர்களது திருமணத்தை நடத்த பிஸ்வநாத்தின் குடும்பத்தார் ஏற்பாடு செய்தனர். அதன்படி, அவர்களது ஊர் வழக்கப்படி, பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என பிரிந்து, மணப்பெண்ணை அழைத்து வந்தனர்.
கோலாகலத் திருமணம்
பின்னர் வழக்கமானச் சடங்குகள் செய்யப்பட, கோலாகலமாக நடைபெற்றது பிஸ்வநாத் தம்பதியின் திருமணம். இந்த விழாவில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் என மொத்தமாக 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருமணத்தின் போது 100 வயது மணமகனான பிஸ்வநாத் வேஷ்டி மற்றும் குர்தா அணிந்திருக்க, மணமகள் சோரோத்வாணி சேலை கட்டியிருந்தார்.
ஆசிர்வாதம்
இந்த திருமண விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு மிகப்பெரிய விருந்தும் அளிக்கப்பட்டது. தங்களது தாத்தா-பாட்டியின் திருமணத்தை பார்த்து ரசித்த அவர்களது பேரன், பேத்திகள் மற்றும் கொள்ளு பேரன், பேத்திகள், புதுமணத் தம்பதியிடம் ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டனர். இந்தத் திருமணப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, நெட்டிசன்களும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.