"ம்ஹூம்.. அவங்க இருக்கும் கட்சியில நம்மளால இருக்க முடியாது".. பாஜகவில் இருந்து விலகிய நடிகை!
டெல்லி வன்முறையை காரணம் காட்டி நடிகை பாஜகவில் இருந்து விலகி உள்ளார்
கொல்கத்தா: "அவங்க இருக்கும் கட்சியில நம்மளால இருக்க முடியாது.." என்று மேற்குவங்க நடிகையும், அரசியல்வாதியுமான சுபத்ரா முகர்ஜி பாஜகவுக்கு எதிராக தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடக்கிறது.. இன்னொரு பக்கம் ஆதரவு தெரிவிப்பவர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் நாட்டில் ஒருவித பரபரப்பு தன்மை ஒட்டிக் கொண்டுள்ளது.
இந்த சமயத்தில் இவர்கள் இரு தரப்பினருமே வடகிழக்கு டெல்லியில் ஒரே இடத்தில் கூடிவிட்டதால், வன்முறை வெடித்தது.. மோதல் தலைதூக்கியது... கலவரம் வெளிப்பட்டது.. கிட்டத்தட்ட 42 பேருக்கும் மேலானோர் இறந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன, நூற்றுக்கணக்கானோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறார்கள்.
கலவரம்
இந்த கலவரத்துக்கும் பிரச்சனைக்கும் முக்கிய காரணமே கபில் மிஸ்ராதான்.. அமைதியாக போராடிய மக்களை வெறிப்பேச்சால் தூண்டி விட்டதே இந்த மிஸ்ராதான். அதனால்தான் கபில் மிஸ்ரா, அன்ராக் தாகூர் போன்ற தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என டெல்லி ஹைகோர்ட் கூட தெரிவித்திருந்தது.. ஆனால் இன்னும் வழக்கு பதியப்படாததும் சர்ச்சையாகி கொண்டு வருகிறது.
வங்காள நடிகை
இந்நிலையில் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் தன்னால் இருக்க முடியாது என்று ஓபனாக தெரிவித்துள்ளார் சுபத்ரா முகர்ஜி.. இவர் பாஜகவை சேர்ந்தவர்.. அரசியல்வாதி மட்டுமல்ல, மேற்கு வங்க நடிகையும்கூட.. குறிப்பாக டிவி சீரியல்களில் சுபத்ரா முகர்ஜி ரொம்பவும் ஃபேமஸ்.. 2013ல் இவர் பாஜகவில் இணைந்தார்.. இவ்வளவு காலம் கட்சியில் இருந்தவர்தான் இப்போது இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். இதை பற்றி அவர் சொன்னதாவது:
பாஜக
"பாஜகவின் செயல்முறை, கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுதான் நான் அந்த கட்சியில் சேர்ந்தேன்.. ஆனால், கொஞ்ச காலமாக அக்கட்சி சரியான பாதையில் செல்லவில்லை என்பதை கவனித்து வருகிறேன்... மக்களை மதத்தால் தீர்மானிப்பதும் வெறுப்பு உணர்வை உருவாக்குவதுமே பாஜகவின் சித்தாந்தமாக மாறிவருவதாக உணர்கிறேன். ரொம்ப நாள் தீவிரமான ஆலோசனைக்கு பிறகு, அந்தக் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துவிட்டேன்.
கொல்லப்பட்டனர்
இப்போ டெல்லியில் என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்... நிறைய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்... பல வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன... காரணம் இந்த கலவரம் மக்களை பிளவுபடுத்துகிறது. பாஜகவில் உள்ள அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா ஆகியோர் வெறுக்கத்தக்க கருத்துகளை சொல்லி உள்ளனர்..இருந்தாலும் இதுவரை அவர்கள் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை... முதலில் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.. கலவரத்தின் காட்சிகள் என்னை மொத்தமாக உலுக்கி போட்டுவிட்டது.
ராஜினாமா
இவ்ளோ மோசமாக பேசின அந்த தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கட்சியில் நான் இனி இருக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன்.. அவங்க இருக்கும் கட்சியில் நான் இருக்க மாட்டேன்... என் ராஜினாமா கடிதத்தை ஏற்கெனவே மேற்குவங்க பாஜக தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டேன்... நேரிலும் சென்று ராஜினாமா முடிவை சொல்லிவிட்டேன்" என்கிறார். சுபத்ரா முகர்ஜி சொன்ன இந்த கருத்துக்கு ஏராளமான ஆதரவுகள் கிடைத்து வருகின்றன.. மேலும் பாஜக கட்சியை உதறிவிட்டு ராஜினாமா செய்தது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் தந்து வருகிறது.