ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்ட பெங்களூரு நபர் சிபிஐ-யிடம் சிக்கினார்!
பெங்களூரு : ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக பெங்களூருவில் கைது செய்ய்பட்ட கெளசிக்கை சிபிஐ அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்துச் செல்லவுள்ளனர். அங்கு வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெறவுள்ளது.
இந்தாண்டுத் துவக்கத்தில் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான ஆபாச வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் படி சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
அதில், இவ்வாறு இணையத்தில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வதில் ஒரு பெரிய கும்பலே செயல்படுவது தெரிய வந்தது. மேலும், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து அவர்கள் செயல்படுவதும் கண்டுபிடிக்கப் பட்டது.
இதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று மாலை பெங்களூருவில் கௌசிக் குனோர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த கௌசிக் பெங்களூரு டாக்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கௌசிக்கின் வீட்டை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அங்கு படத்தொகுப்பு செய்யும் கருவிகள், கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவை சிக்கின. மேலும், 500க்கும் அதிகமான ஆபாச வீடியோக்களும் கிடைத்தன. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கருவிகள் மூலமாகவே ஆபாச படங்களை கௌசிக் இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் கௌசிக் அதிக வருமானம் ஈட்டியிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதன் மூலம் கிடைத்த பணத்தில் பெங்களூருவில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார் கௌசிக்.
கைது செய்ய்பட்ட கெளசிக்கை இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை 4 நாள் காவலில் எடுத்தனர். இதையடுத்து அவரை டெல்லிக்கும் பின்னர் அங்கிருந்து சித்தாப்பூருக்கும் அதிகாரிகள் அழைத்துச் செல்லவுள்ளனர். அதன் பின்னர் ஒடிஷாவுக்கு அவர் கொண்டு செல்லப்படுவார்.
இணையத்தில் உலா வரும் ஆபாச வீடியோக்களை சிறப்பு சாப்ட்வேர் மூலம், அதனை பதிவேற்றம் செய்தவர்கள் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்து வருகின்றனர். அந்தவகையில் மூன்று ஆபாசப் படங்களை ஆய்வு செய்தபோது, அதனை கௌசிக் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. ஏற்கனவே, இதேபோல், ஒடிசாவில் இரண்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இந்த கும்பலில் உள்ள மற்றவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாடு தழுவிய மாபெரும் மோசடி
இந்தக் கும்பல் நாடு தழுவிய அளவில் இந்த அக்கிரமத்தைச் செய்துள்ளதை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மிகப் பெரிய கட்டமைப்போடு இதை அவர்கள் செய்து வந்துள்ளனர். எம்எம்எஸ்களை மிகப் பெரிய அளவில் அனுப்பி வந்துள்ளனர்.
தற்போது சிக்கியுள்ள கெளசிக் கடந்த 2013 முதல் பெங்களூரில் வசித்து வருகிறார். டாக்ஸி நிறுவனம் ஒன்றில் ரென்ட் ஏ டிரைவர் வேலையில் ஈடுபட்டு வந்த கௌசிக்கை, அவருடை கம்ப்யூட்டரின் ஐபி முகவரியை வைத்து சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.