மானபங்கம், நிர்வாண போட்டோ.. பெங்களூரில் ஓலா டாக்சியில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
Recommended Video
பெங்களூர்: தனியாக பயணித்த பெண் பயணியை தாக்கி உடைகளை களைந்து போட்டோ பிடித்த 'ஓலா' கால் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர் கோடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 26 வயதாகும் அந்த பெண். ஆர்கிடெக்காக வேலை பார்த்து வருகிறார். மும்பை செல்வதற்காக, ஜூன் 1ம் தேதி அதிகாலை 2 மணியளவில் தனது வீட்டில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் செல்வதற்காக செடான் வகை காரை ஓலா நிறுவனத்தின் வாயிலாக புக் செய்தார்.
அருண் என்ற டிரைவர் காருடன் வீட்டில் இருந்து பெண்ணை பிக்அப் செய்தார். ஜீவன்பீமா நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் டோல்கேட் செல்லாமல் வேறு வழியில் காரை திருப்பியுள்ளார் அருண்.
லாக்கான கார் கதவு
இதுகுறித்து அந்த பெண் கேட்டபோது, டோல் கேட் வழியாக சென்றால் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதோடு, தாமதமும் ஆகும். எனவே நான் ஷார்ட் ரூட்டில் உங்களை அழைத்து செல்கிறேன் என கூறியுள்ளார். சற்று தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கார் சென்றபோது, அந்த பெண் அச்சமடைந்தார். டிரைவரிடம் வாக்குவாதம் செய்து மெயின் ரோடுக்கு திரும்ப கூறியுள்ளார். ஆனால் அவர் நிறுத்தாமல் காரை இயக்கவே, காரின் கதவை திறக்க முற்பட்டுள்ளார் அந்த பெண். ஆனால் கதவு லாக் செய்யப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
செல்போன் பறிப்பு
தப்பித்து செல்ல அந்த பெண் முயல்வதை பார்த்த அருண், பெண்ணிடமிருந்த செல்போனை பறித்துக்கொண்டார். இதனால் ஓலா ஆப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் எமெர்ஜென்சி பொத்தானை அழுத்தி உதவி கோர அப்பெண்ணால் முடியவில்லை. இதையடுத்து ஆடைகளை முழுமையாக களையுமாறு அருண் மிரட்டியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.
நிர்வாண போட்டோக்கள்
ஆடைகளை களைந்து நிர்வாணமாக தன் முன்னால் நிற்காவிட்டால், எனது நண்பர்களுக்கு போன் செய்து கூப்பிடுவேன். அவர்களும், நானும் உன்னை கூட்டாக பலாத்காரம் செய்வோம் என்று மிரட்டியுள்ளார் அருண். உதவிக்கு யாரும் இல்லாத இடத்தில் சிக்கிக்கொண்ட அந்த பெண், தனது ஆடைகளை களைந்துள்ளார். இதையடுத்து நிர்வாணமாக அவரை பல கோணங்களில் தனது செல்போனில் போட்டோ எடுத்த அருண், தனது வாட்ஸ்அப் எண்ணுக்கும் அதை அனுப்பியுள்ளார். இதன்பிறகு, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்கள் (molests) செய்துள்ளார்.
சமயோஜிதமாக தப்பித்தார்
சூழ்நிலை மோசமாக இருப்பதை உணர்ந்த அந்த பெண், தன்னை எப்படியாவது ஏர்போர்ட்டில் விட்டுவிடுமாறும், நடந்தது பற்றி யாருக்கும் சொல்லமாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து ஏர்போர்ட்டில் கொண்டு சென்றுவிட்ட அருண், நடந்ததை வெளியே சொன்னால் நிர்வாண போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டிவிட்டு திரும்பியுள்ளார். இதனிடையே மும்பை சென்று சேர்ந்ததும், நடந்த சம்பவங்களை இ-மெயிலில் புகாராக தெரிவித்து பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர், சுனில்குமாருக்கு அனுப்பியுள்ளார் அந்த பெண். புகாரில், கார் மற்றும் டிரைவர் பற்றிய விவரங்களையும் அப்பெண் இணைத்து அனுப்பியிருந்தார்.
3 மணி நேரத்தில் கைது
இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் புகாரை பதிவு செய்த போலீசார், 3 மணி நேரத்திற்குள் அருணை கைது செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூர் கமிஷனர் அலுவலகத்தில் இன்று, முகத்தில் மாஸ்க் அணிவித்து அருணை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் போலீசார் நிறுத்தினர். அவரது காரையும் காட்சிப்படுத்தினர். இந்த சம்பவம் பெங்களூர் பெண்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.