குண்டுவெடிப்பு எதிரொலி: பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்ட நேரத்தை குறைந்தது காவல்துறை
பெங்களூரு: குண்டுவெடிப்பு எதிரொலியால் பெங்களூரின் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு பகுதிகளில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான காலக்கெடு குறைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் 31ம்தேதி, எம்ஜிரோடு மற்றும் அதன் அருகேயுள்ள பிரிகேட் ரோடு பகுதியில் ஆ.யிரக்கணக்கான், இளைஞர், இளைஞிகள் ஒன்றுகூடி ஆடிப்பாடி, புத்தாண்டை வரவேற்பது வழக்கம். வழக்கமாக அதிகாலை 1 மணிவரை கொண்டாட்டங்கள் தொடர போலீசார் அனுமதிப்பார்கள். ஆனால் இம்முறை அதிகாலை 2 மணிவரை புத்தாண்டை கொண்டாட போலீசார் அனுமதி கொடுத்திருந்தனர்.

இதனிடையே எம்ஜிரோடு பகுதியில் நேற்றிரவு குண்டுவெடிப்பு நிகழ்ந்து சென்னையை சேர்ந்த பவானி தேவி என்ற பெண் உயிரிழந்தார். இதுகுறித்து முதல்வர் சித்தராமையா தலைமையில், அவரது அரசு இல்லத்தில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், கர்நாடக போலீஸ் டிஜிபி லால்ருக்கும் பச்சாவோ, பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி மற்றும் பல உயர் போலீஸ் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கர்நாடகாவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, "மக்கள் அச்சப்பட வேண்டாம், போலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். உயிரிழந்த பவானி தேவி குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். மாநில சட்டசபையான விதானசவுதாவை சுற்றிலுமுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்தை உயர் பாதுகாப்பு கொண்ட பகுதியாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறுகையில், "எம்ஜிரோடு மற்றும் பிரிகேட் ரோடு பகுதிகளில் மட்டும் அதிகாலை 1 மணிவரைதான் புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படும். பிற பகுதிகளில் அதிகாலை 2 மணிவரை புத்தாண்டு கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபடலாம். இருப்பினும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications