சிக்கன் கபாப்பை ருசிக்க சைக்கிளை திருடிய ‘காக்கா முட்டைகள்’... பெங்களூருவில்!
பெங்களூரு: பெங்களூருவில் சிக்கன் கபாப்பை ருசிப்பதற்காக காக்கா முட்டை பட பாணியில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
தேசிய விருது பெற்ற படம் காக்கா முட்டை. பீட்சா சாப்பிட ஆசைப்படும் இரண்டு சிறுவர்களின் கதை தான் இது. இப்படத்தில் பீட்சா சாப்பிடும் ஆசையில் அச்சிறுவர்கள் நிலக்கரியைத் திருடி விற்று பணம் சேர்ப்பார்கள்.

இந்நிலையில், காக்காமுட்டைகளின் ஐடியாவைப் பின்பற்றி பெங்களூருவில் இரண்டு சிறுவர்கள் சிக்கன் கபாப் சாப்பிடுவதற்காக சைக்கிளை திருடியுள்ளனர்.
பெங்களூரு மல்லேசுவரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக சைக்கிள் திருட்டு அதிகமாக நடந்து வந்தது. இது குறித்தப் புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு படித்து வரும் 2 சிறுவர்கள் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அச்சிறுவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சிக்கன் கபாப் சாப்பிடுவதற்காக திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டது.
இது தொடர்பாக அச்சிறுவர்கள் போலீசில் கூறியதாவது:-
எங்கள் 2 பேருக்கும் ‘சிக்கன் கபாப்' சாப்பிட வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்து வந்தது. இருந்தாலும் எங்கள் இருவரின் வீட்டிலும் அசைவ உணவுகள் சமைப்பது இல்லை. ஓட்டல்களில் சென்று சாப்பிடுவதற்கும் எங்களிடம் பணம் இல்லை. எப்படியாவது பணம் சம்பாதித்து ‘சிக்கன் கபாப்' ருசித்து சாப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.
பணம் எவ்வாறு சம்பாதிப்பது? என்று நாங்கள் பல கோணங்களில் யோசித்தோம். அந்த சந்தர்ப்பத்தில் எங்களின் மூளையில் ஒரு திட்டம் உதித்தது. அதாவது, வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் சைக்கிள்களை திருடி விற்று பணம் சம்பாதிக்க முடிவு செய்தோம். அப்படி திருடிய சைக்கிள்களை ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்து அந்த பணத்தில் ‘சிக்கன் கபாப்' சாப்பிட்டு வந்தோம்' என்றனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அச்சிறுவர்களை இனி இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது எச்சரித்தனர். பின்னர், அச்சிறுவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களுக்கும் போலீசார் அறிவுரை கூறினர்.












Click it and Unblock the Notifications