பால்கனியில் போன் பேசிய போது விபரீதம்.. 9ம் மாடியில் இருந்து விழுந்து இன்ஜினியர் பலி
பெங்களூருவில் பால்கனியில் நின்று போன் பேசிய பொறியாளர் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
பெங்களூரு: பெங்களூருவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது, 28 வயது இளைஞர் ஒருவர் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெள்ளந்தூரில் தனது ஐந்து நண்பர்களுடன் கௌதம் என்ற மென்பொருள் பொறியாளர் கடந்த வியாழனன்று இரவு ஹோலி கொண்டாடி உள்ளார்.

இரவு 11 மணியளவில் கௌதமிற்கு அவர்களது பெற்றோர் போன் செய்துள்ளனர். அவர்களுடன் பேசுவதற்காக அவர் பால்கனிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பால்கனி சுவரில் சாய்ந்த அவர், நிலை தடுமாறி ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அந்தக் கட்டிடத்தின் காவலாளி, கௌதம் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தலையில் பலத்த காயமடைந்த கௌதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கௌதம் கீழே விழுந்து 15 நிமிடங்களுக்குப் பிறகே அவர்களது நண்பர்களுக்கு விசயம் தெரிந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கௌதமின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கௌதமின் சகோதரி அளித்த புகாரின் பேரில் கௌதமின் மரணம் எதிர்பாராத விபத்தா அல்லது கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹோலி கொண்டாட்டத்தின் போது, இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications