ஆக்ராவை அதிர வைத்த ‘தெறி’ உற்சாகம்! அண்ணன்டா..தம்பிடா.. இணைந்த கைகளான ராகுல் காந்தி- அகிலேஷ் யாதவ்!
ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் ஒரே மேடையில் கை கோர்த்து நின்ற காட்சியை பார்த்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர் உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.
லோக்சபா தேர்தலுக்கான "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலுக்காக 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே சுமூகமான தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இரு கட்சிகளும் வலிமையாக இருப்பதால் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4; காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன; குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் காங்கிரஸ் 24; ஆம் ஆத்மி 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. குஜராத்தில் பரூச், பாவ்நகர் ஆகிய தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியிடும்; ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 10 தொகுதிகளில் காங்கிரஸ் 9; ஆம் ஆத்மி 1 தொகுதியில் போட்டியிடுகிறது. ஹரியானாவின் குருஷேத்ரா லோக்சபா தொகுதி ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது; சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் ஒரே ஒரு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 2 லோக்சபா தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் முதலில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சி இடையே சுமூகமான உறவு திரும்பியது.
இந்த மகிழ்ச்சியுடனேயே தற்போது உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வரும் ராகுல் காந்தியின் நிகழ்ச்சிகளில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். இரு கட்சிகளின் தலைவர்களும் ஒரு சேர கை கோர்த்து மேடையில் நின்றதை பார்த்த தொண்டர்களும் உற்சாக குரல் எழுப்பி ஆக்ரா நகரையே அதிர வைத்தனர். முன்னதாக ராகுல் காந்தியின் உ.பி. யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications