கோவாவில் யாசின் பட்கல் வெடிகுண்டு தயாரிக்கும் லேப் வைத்திருந்தானா?
பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் யாசின் பட்கல் இந்திய-நேபாள எல்லையில் கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்யப்பட்டான். அவனிடம் தேசிய புலனாய்வு நிறுவனத்தார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் கோவா சென்றனர்.
அங்கு உள்ள அன்ஜுனா கிராமத்தில் யாசின் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது வெடிகுண்டு தயாரிக்கும் சாதனம் பறிமுதல் செய்யப்பட்டது என்று கோவா முதல்வர் மனோகர் பாரிகர் தெரிவித்தார். மேலும் சில ஆசிட் பாட்டல்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
முன்னதாக தேசிய புலனாய்வு நிறுவனத்தார் யாசின் பட்கலை கடந்த சனிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து கோவா அழைத்து சென்றனர். அன்ஜுனா கிராமத்தில் உள்ள அந்த வீடு மற்றும் பனாஜி அருகே உள்ள குடிசைப் பகுதியான சிம்பல் ஆகிய இடங்களுக்கு அவனை அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு அன்று இரவே டெல்லி கிளம்பினர்.
அப்போது சிம்பல் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பட்கல் பயன்படுத்திய பழைய பைக் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அன்ஜுனா கிராமத்தில் வேறு ஒரு நபர் புனே முகவரியை கொடுத்து வீடு எடுத்துள்ளார். பின்னர் அவருடன் வந்து பட்கல் தங்கியுள்ளான்.