அன்பழகன் வழக்கில் ஏப்.15-ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! அதுவரை ஜெ. அப்பீல் வழக்கில் தீர்ப்புக்கு தடை
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 15-ந் தேதியன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. அதுவரை மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

இம்மனு மீதான விசாரணைகள் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க.பொதுச்செயலர் அன்பழகன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் மதன் லோகுர், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. இம்மனு மீதான விசாரணைகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைந்தன.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ந் தேதியன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் ஏப்ரல் 15-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதால் அதுவரை ஜெயலலிதா உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கவும் இடைக்கால தடை விதித்தனர் நீதிபதிகள்.












Click it and Unblock the Notifications