நாங்கள் தலையிட வேண்டிவரும்.. 5 இடதுசாரி செயற்பாட்டாளர்கள் கைதில் உச்ச நீதிமன்றம் அரசுக்கு குட்டு!
மத்திய அரசின் புகாரில் பொய் இருந்தால் 5 இடதுசாரி செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வேண்டிவரும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி: மத்திய அரசின் புகாரில் பொய் இருந்தால் 5 இடதுசாரி செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வேண்டிவரும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவின், பீமா கோரேகான் அஞ்சலி சம்பவத்தில் கலவரம் நடந்தது. இது தொடர்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் போலீஸ் திடீர் சோதனை நடத்தியது.
தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கர் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் போலீஸ் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் 5 இடதுசாரி செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
பீமா கோரேகான் என்றால் என்ன
மகாராஷ்டிராவில், பீமா கோரேகான் அஞ்சலி ஊர்வலம் மிகவும் பிரபலம். 1817ம் ஆண்டு பிராமணிய பேஷ்வா ராணுவத்திற்கு எதிரான சண்டையில் பட்டியல் இன மக்களுக்கு அஞ்சலி செலுத்த எல்லா வருடமும் மகாராஷ்டிராவில் பட்டியல் இன மக்கள் பேரணி செல்வது வழக்கம். இந்த வருடம் நடந்த 200ம் ஆண்டு நினைவு பேரணியில் கலவரம் ஏற்பட்டது.
கைது செய்யப்பட்டனர்
இதில் தொடர்பு உள்ளவர்கள் என்று இடதுசாரி சிந்தனையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். வரவர ராவ், சுதா பரத்வாஜ், அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உபா சட்டம் இவர்கள் மீது பாய்ந்துள்ளது. இவர்கள் மோடிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
வீட்டு காவலில் உள்ளனர்
இந்த நிலையில் இவர்களை விடுதலை செய்ய கோரி வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாபர் உட்பட 5 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களை சிறையில் அடைக்க கூடாது என்றும், வீட்டு காவலில் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வீட்டு காவல் வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் குட்டு
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இதில் இன்று முக்கியமான உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன்படி இடதுசாரி சிந்தனையாளர்கள் 5 பேர் விசாரணையில் நீதிமன்றம் தேவைப்பட்டால் தலையிடும், என்ன புகார் உள்ளது, என்ன ஆதாரம் உள்ளது என்று தலையிட்டு விசாரிக்கும் என்றுள்ளது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பென்ச் உறுதியாக தலையிடும் என்று கூறியுள்ளது.
என்ன செய்யும்
மேலும், நாங்கள் போலீஸ் கொடுத்த ஆவணங்களை பார்ப்போம், அதில் தவறாக எதுவும் இருந்தால் இந்த வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டி வரும். அவர்களை விடுதலை செய்ய வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.