சத்தீஸ்கரில் மெகா வெற்றி எந்த கட்சிக்கு தெரியுமா! ஒன்று இல்லை இரண்டு சர்வே சொல்வது ஒரே விஷயம்தான்
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இன்னும் லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை இப்போதே ஆரம்பித்துவிட்டன.

அதற்கு முன்னதாக இந்தாண்டு இறுதியில் மொத்தம் 5 மாநிலங்களில்- மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 5 தேர்தல் லோக்சபா தேர்தலுக்கு அரையிறுதியாகப் பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கர்: இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் நேரடியாகக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே போட்டி நிலவுவதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைக் கர்நாடக தேர்தலில் கொடுத்த வெற்றி அவர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. எனவே, அதே வெற்றியை இந்த மாநிலங்களிலும் பெற முயல்கிறார்கள். மறுபுறம் அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கு முன்பு நடக்கும் இந்தத் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெற வேண்டும் பாஜக நினைக்கிறது.
இதில் சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 68 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்து. சத்தீஸ்கரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தது. மறுபுறம் அப்போது ஆட்சியில் இருந்த பாஜகவால் கடந்த 2018 தேர்தலில் அங்கே வெறும் 15 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
சட்டசபைத் தேர்தல்: இப்போது 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலுக்கு மீண்டும் ரெடியாகிறது. இதற்கிடையே சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு வரும் சட்டசபைத் தேர்தலில் அங்கே ஆட்சியைத் தக்கவைக்கும் என்று இரண்டு வெவ்வேறு அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கக் குறைந்தபட்சம் 46 இடங்கள் தேவை.
இந்த இரு சர்வேகளிலும் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. அதில் டிபி லைவ் நடத்திய சர்வேபடி வரவிருக்கும் சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 48-60 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜக 28-40 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி: அதேபோல ஐஏஎன்எஸ் நடத்திய மற்றொரு சர்வே-இல் அங்குள்ள பூபேஷ் பாகல் அரசுக்கு மெகா வெற்றி கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்குக் காங்கிரஸ் கட்சிக்கு 62 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல பாஜகவுக்கு வெறும் 27 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதியில் அங்கே சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரு சர்வேக்களும் காங்கிரஸ் கட்சியே வெல்லும் எனக் கூறியிருப்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications