லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்காக பட்ஜெட்டில் வரப்போகுது அறிவிப்பு மழை?
லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்காக பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்காகவே பட்ஜெட்டில் விவசாயிகள், வேலை வாய்ப்பு தொடர்பாக நிறைய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடக் கூடும் என கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந் தேதி நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம் என்கிற நிலையில் பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கலாம்.
கடந்த 4 ஆண்டுகளில் பாஜக அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். மாற்றத்தை தருவார் மோடி என நம்பி வாக்களித்த கடும் ஏமாற்றத்திலும் விரக்தியின் உச்சத்திலும் இருக்கின்றனர்.

பொருளாதார சரிவு
கடந்த 4 ஆண்டுகாலம் வெறும் வாக்கு அரசியல், வன்முறை மட்டும்தான் நடந்திருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் படுமோசமான சரிவை சந்தித்துவிட்டது. அன்னிய முதலீடுகள் இந்தியாவுக்குள் வரவில்லை.

தொழில்கள் நாசம்
பருவமழை பொய்த்ததால் விவசாயமே முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் நாட்டின் சிறு, குறு தொழில்கள் நசிந்து நாசமாகிப் போனது. பல கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தொலைத்துவிட்டனர். தொழில்களை நடத்தியவர்கள் அவற்றைத் தொலைத்துவிட்டு தொழிலாளிகளாக பணிபுரியும் பேரவலம் நிகழ்ந்திருக்கிறது.

பாஜகவுக்கு சூடு
இவை அனைத்தும் தேசத்தின் நான்கு திசைகளிலும் கனலாக கனன்று கொண்டிருக்கிறது. பாஜகவுக்கு இந்த நெருப்பு கங்கு படுமோசமான காயத்தை தரும்.

அறிவிப்பு மழை
ஆகையால் தங்களுக்கான கடைசி ஒரு வாய்ப்பாக இந்த பட்ஜெட் எனும் ஆயுதத்தை பாஜக கையில் எடுக்கும். அனைத்து தரப்பு மக்களின் கோபத்தை ஓரளவு சரிகட்டும் வகையிலான அறிவிப்பு மழைகளை பாஜக அள்ளிவிடக் கூடும் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் இந்த அறிவிப்பு மழை மக்களின் பெருங்கோபத்தை தணிக்குமா? என்பதை தேர்தல் முடிவுகளே வெளிப்படுத்தும்.












Click it and Unblock the Notifications