பாஜக லேசா முந்துதே.. பெரிய மாநிலம்.. ம.பி ரிசல்ட் 2024ஐ பாதிக்குமே.. கையை பிசையும் காங்கிரஸ்!
போபால்: மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள், வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான திசையை காட்டக்கூடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி வாக்கு எண்ணிக்கையில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவினாலும் பாஜக சற்று முந்துகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலையில் (காலை 9 மணி) பாஜக 70 இடங்களிலும், காங்கிரஸ் 62 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.

சட்டசபை தொகுதி எண்ணிக்கையின் அடிப்படையிலும், நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையிலும் பார்த்தால் இந்தியாவின் 6வது பெரிய மாநிலம் மத்திய பிரதேசம். மத்திய பிரதேசத்தில் 29 லோக்சபா தொகுதிகள் உள்ளன, 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 பேரை மத்திய பிரதேசம் அனுப்புகிறது. மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெறுவதால் மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் முக்கியமானது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் என ஐந்து மாநில சட்டசபைக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று மிசோரம் தவிர 4 மாநில முடிவுகள் வெளியாகின்றன. இந்த 5 மாநில தேர்தல்கள், 2024 லோக்சபா தேர்தலுக்கான, 'செமி ஃபைனல்ஸ்' எனப்படும், அரை இறுதிப் போட்டியாக பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன் நடக்கும் கடைசி சட்டசபை தேர்தல்கள் என்பதால், இந்த ஐந்து மாநில தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் லோக்சபா தேர்தல் முடிவுக்கு முன்னோட்டமாக அமையுமா என்ற விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.
மொத்தம் 230 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கூடுதலாக உள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி கடும் போட்டியை அளிக்கும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.
பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று மத்திய பிரதேசம். கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக பாஜக அங்கு ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 109 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றது.
கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் ம.பி.யில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஒரே ஆண்டில் எம்எல்ஏக்களின் அணி தாவலால் ஆட்சி பறிபோனது. இந்த முறை பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நோக்கில், பெண்களுக்கு மாத உதவித் தொகை, இலவச பேருந்து சேவை, இலவச மின்சாரம் போன்ற அடுக்கடுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியுள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்காக 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ள எதிர்க்கட்சிகளுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான அரையிறுதி மோதலாக இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் கருதப்படுகிறது. அதிலும், காங்கிரஸ் - பாஜக இடையே கடுமையான போட்டி நிலவும் மாநிலமான மத்திய பிரதேசத்தைக் கைப்பற்றும் இந்த யுத்தத்தில் யார் கை ஓங்கும் என்பது அனைவராலும் கவனிக்கப்படுகிறது.
வரலாற்று ரீதியாக, கடந்த தேர்தல்களை வைத்துப் பார்த்தால், சட்டமன்றத் தேர்தல்கள் மக்களவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், பெரிய மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் மத்தியில் ஆளும் கட்சியின் வெற்றி தோல்வி, குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தக்கூடும் என்பது நிதர்சனம்.












Click it and Unblock the Notifications