பஞ்சாப் மக்கள் எனக்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு அளித்துள்ளனர் - அம்ரிந்தர் சிங்
பஞ்சாப் மாநில மக்கள் தனக்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு அளித்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் கேப்டன் அம்ரிந்தர் சிங் கூறியுள்ளார்.
பாட்டியாலா: பஞ்சாப் மாநில மக்கள் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தனக்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசை அளித்துள்ளதாக முதல்வர் வேட்பாளர் கேப்டன் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 70க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆளும் சிரோமணி அகாலிதளம் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் அம்ரிந்தர் சிங் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். இத்தேர்தலில், பாட்டியாலா தொகுதியில் அம்ரிந்தர் சிங் வெற்றி பெற்றுள்ளளார். அவர் இன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த வெற்றி அவருக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்து கொண்டிருப்பதால் அம்ரிந்தர் சிங் தனது பிறந்தநாளுடன் தேர்தல் வெற்றியையும் கொண்டாடி வருகிறார். செய்தியாளர்களை சந்தித்த அவர், பஞ்சாப் மாநில மக்கள் மிகப்பெரிய பிறந்தநாள் பரிசை தனக்கு அளித்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் 65 இடங்களில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தாகவும், எதிர்பார்ப்புக்கு மேலாக மக்கள் வெற்றியை தமக்கு அளித்திருப்பதாகவும் கூறினார்.
மாநிலத்தில் போதைப் பொருள் ஒழிப்புக்கு முதல் முக்கியத்துவம் அளிப்போம் என்று கூறிய அவர், சுகாதாரம், கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். இது கோடை காலத்தில் எதிர்கட்சிகளுக்கு சரியான தண்டனையை கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
பஞ்சாப் மாநில மக்கள் புத்திசாலிகள், அவர்கள் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று தெளிவாக இருக்கின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலின் முதல்வர் கனவு தகர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.