பீகார் முதல்வராக நிதிஷ்குமார் நவ.20-ல் பதவியேற்பு- சோனியா, மமதா, கேஜ்ரிவால் பங்கேற்பு!!
பாட்னா: பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் வரும் 20-ந் தேதி பதவி ஏற்க உள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று அம்மாநில அமைச்சரவை கூடி சட்டசபையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றியது.
இதன்படி ஆளுநர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து தமது ராஜினாமாவை முறைப்படி நிதிஷ்குமார் அளித்தார். இதனை ஆளுநரும் உடனே ஏற்றுக் கொண்டு சட்டசபையைக் கலைக்க பரிந்துரைத்தார். மேலும் புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்வராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி நிதிஷ்குமாரை மகா கூட்டணியின் சட்டசபை குழுத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனைத் தொடர்ந்து புதிய அரசு அமைக்க முறைப்படி நிதிஷ்குமார் உரிமை கோரினார்.
பாட்னா காந்தி மைதானத்தில் வரும் 20-ந் தேதியன்று பகல் 2 மணியளவில் நிதிஷ்குமார் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.
நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.