பீகாரில் மெதுமெதுவாக அரசியல் மாற்றங்கள் அரங்கேறுவதன் பின்னணி என்ன?
பாட்னா: பீகாரில் ஆட்சி மாற்றம் சுமூகமாக நடந்துவிடும் என்று எதிர்பார்த்தார் நிதிஷ்குமார். ஆனால் விடாக் கண்டனாக ஜிதன்ராம் மஞ்சி இருப்பதால் நிதிஷ்குமாருக்கு பெருத்த ஏமாற்றம்.
ஐக்கிய ஜனதா தளத்தினரைப் பொறுத்தவரையில் மஞ்சியின் இந்த பிடிவாதம் தவறானதாகத் தோன்றலாம்.. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்கிற அடிப்படையில் தமது பதவியை தக்க வைத்துக் கொள்ள அவருக்கு உரிமை இருக்கிறது. அதுவும் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மஞ்சிக்கு ஆதரவு பலமாகவும் இருக்கிறது.
பீகார் நிலவரம் தொடர்பாக பல்வேறு சட்ட வல்லுநர்களிடம் நமது ஒன் இந்தியா விவாதித்ததில் பலரும் மஞ்சிக்கு எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், ஒரு மாநில அரசை அவ்வளவு எளிதாக ஒரு மாநில ஆளுநர் தூக்கி எறிந்துவிட முடியாது என்றே சுட்டிக்காட்டுகின்றனர்.

20-ந் தேதி வாய்ப்பு
பீகாரில் வரும் 20-ந் தேதியன்று பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். இது மிகச் சரியான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

சட்டசபைதான்..
ஒரு மாநில அரசின் தலைவிதியை அம்மாநில சட்டசபையே தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர ஒரு கட்சியின் தலைமை அலுவலகமோ அல்லது ஆளுநர் மாளிகையோ அல்ல..

சரியான நடவடிக்கை
ஆளுநரைப் பொறுத்தவரை முடிவெடுப்பதில் கால அவகாசம் எடுத்துக் கொள்ள அவருக்கு அரசியல் சாசனம் உரிமை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் அவர் முடிவே எடுக்காமல் இருந்துவிடவும் முடியாது. பீகார் ஆளுநரைப் பொறுத்தவரை மாநில அரசைக் கலைக்காமல் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருப்பது சரியான நடவடிக்கையே.

எப்போது கலைக்கலாம்?
ஒரு மாநில ஆளுநர் சட்டசபையைக் கலைப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே சட்டம். இத்தகைய வாய்ப்பு எதுவுமே கிடைக்காமல் போனால்தான் சட்டசபையைக் கலைக்க முடியும்.

அடுத்து என்ன?
தற்போது பீகார் மாநில சட்டசபையில் பெரும்பான்மையை மஞ்சி நிரூபிக்க முடியாமல் போனால் அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாம் அல்லது சட்டசபையை கலைக்கவும் பரிந்துரைக்கலாம். பீகார் போன்ற நெருக்கடியான சூழலில் பொதுவாக சட்டசபையைக் கலைப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கப்படுவதுதான் வழக்கம்.

ஆட்சிக் காலம்
மேலும் இதுபோன்ற சூழல்களில் அந்த மாநில அரசின் ஆட்சிக் காலமும் ஒரு முக்கிய காரணியாக அமைந்துவிடுகிறது. மாநில அரசின் ஆட்சி காலம் நீண்ட ஆண்டுகள் இருந்தல் அடுத்த தேர்தல் தேதி வரை புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து ஆளுநர் மேற்கொள்ளலாம். பீகாரைப் பொறுத்தவரையில் தற்போதைய ஆட்சியின் காலம் முடிவடைய இருப்பதால் புதிய அரசு ஒன்றை அமைப்பது குறித்து ஆளுநர் ஆலோசிப்பதும் வாய்ப்பு வழங்குவதும் தொடரலாம்.

அதென்ன எஸ்.ஆர். பொம்மை வழக்கு?
1989ஆம் ஆண்டு கர்நாடகாவில் எஸ்.ஆர். பொம்மையை முதல்வராகக் கொண்டு ஜனதா கட்சி நடைபெற்றது. அப்போது ஜனதா கட்சியில் குழப்பம் ஏற்பட்டது.

கர்நாடகா அரசு டிஸ்மிஸ்
இதனைத் தொடர்ந்து சட்டசபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்குமாறு ஆளுநராக இருந்த வெங்கடசுப்பையாவிடம் பொம்மை வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பைக் கொடுத்த மறுத்ததுடன் பொம்மை அரசையும் ஆளுநர் டிஸ்மிஸ் செய்தார்.

பொம்மை வழக்கு
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்குப் போனார் எஸ்.ஆர். பொம்மை. இதுதான் இந்திய அரசியல் சரித்திரத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த எஸ்.ஆர்.பொம்மை வழக்கு என்பதாகும். 5 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கை உச்சநீதிமன்றம் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்தது.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
இந்த வழக்கின் தீர்ப்புதான் அரசியல் சாசனம் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளை நினைத்த நேரத்தில் கலைக்கிற மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடிவாளம் போடப்பட்டது. அசாதாரண சூழலில்தான் இந்த பிரிவை பயன்படுத்த முடியும் என்றது உச்சநீதிமன்றம். இதன்பின்னர்தான் மாநில அரசுகளை மத்திய அரசு திடீர் திடீர் என கலைப்பதும் குறைந்து போனது.












Click it and Unblock the Notifications