சென்னை மழை: முதல் மாத சம்பளத்தை நிவாரணமாக அளித்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி
லக்னௌ: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்காக பீகார் மாநில துணை முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி தனது முதல் மாத சம்பளத்தை வழங்குவதாக இன்று அறிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார்.

அவரைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்கள் உள்பட 28 மந்திரிகளும் பதவியேற்றனர். இவர்களில் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனும், முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றவருமான தேஜஸ்வி பிரசாத், 28 துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். துணை முதல்வரான தேஜஸ்விக்கு, சாலை மற்றும் கட்டுமானத்துறை உள்ளிட்ட மூன்றுதுறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னுடைய முதல் மாத சம்பளத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்காக வழங்குவதாக தேஜஸ்வி இன்று அறிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்த நிதியுதவியை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் சென்னை வெள்ள பாதிப்புகள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் துயரை தீர்க்க பீகார் உறுதுணையாக நிற்கும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் வேண்டிக் கொள்வதாகவும் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications