பீகார் சட்டசபையில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
பாட்னா: பீகார் சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. சபாநாயகருக்கு எதிராக 125 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 112 வாக்குகளும் பதிவாகியது
பீகாரில் இன்று அந்த மாநில சட்டசபையில் அந்த மாநில சபாநாயகரான, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக தற்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும், இது நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாகவும் இருந்தது.

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை கடந்த மாதம் 28ஆம் தேதி காலையில் ராஜினாமா செய்தார். உடனேயே பாஜவுடன் புதிய கூட்டணி அமைத்து, மாலையிலேயே 9வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார். அவருடன் 2 துணை முதல்வர்கள் உட்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
புதிய ஆட்சி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நிகழ்வாக அமைச்சரவை விஸ்தரிப்பு மற்றும் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த சபாநாயகர் அவத் பிகாரி சவுத்ரியை நீக்கும் நடவடிக்கையை நிதிஷ், பாஜக கூட்டணி தொடங்கியது. முந்தைய ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் சபாநாயகராக பதவிவகித்து வந்த அவத் பிஹாரி, பா.ஜ.க. - ஜனதா தளம் கூட்டணி அமைத்த பிறகு தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய தயக்கம் காட்டினார்.
இதற்காக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை பாஜக வழங்கியது. இந்த நிலையில், இன்று அந்த மாநில ஆளுங்கட்சி சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
சபாநாயகருக்கு எதிராக 125 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 112 வாக்குகளும் பதிவாகியது. இதனால், நிதிஷ்குமார் அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அவத் பிஹாரி சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ள நிலையில் இப்பதவியை பாஜகவுக்கு தர நிதிஷ் சம்மதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications