காதலியை மீட் செய்யனுமாம்.. அதுவும் பள்ளியில்.. எலக்ட்ரீசியன் செய்த வேலையை பாருங்க.. ஊரே ஆடிப்போச்சு
பீகார்: பீகார் மாநிலத்தில் கிராமம் முழுவதும் மின்தடையை ஏற்படுத்திவிட்டு இரவு நேரத்தில் பள்ளியில் காதலியை ரகசியமாக எலக்ட்ரீசியன் சந்தித்தார். இந்த ஜோடியை பிடித்த கிராம மக்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாட்டால் பல்வேறு மாநிலங்களில் தற்போது அறிவிக்கபடாத மின்வெட்டுகள் உள்ளன. கடந்த சில வாரங்களை ஒப்பிடும்போது இந்த பிரச்சனைக்கு தற்போது பெரும்பாலான மாநிலங்களில் தீர்வு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மட்டும் இரவில் தினமும் 2 முதல் 3 மணிநேரம் தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டு வருகிறது. இதன் பின்னணி காரணம் குறித்து கிராம மக்கள் ஆராய்ந்தபோது தான் மின்சாரத்தை துண்டித்த நபர் இளம்பெண் ஒருவரை சம்சாரமாக்க முயற்சிக்கும் விஷயம் தெரியவந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:
4.80 லட்சம் டன் நிலக்கரி: மலேசியா, இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வருகை.. மின் வாரிய அதிகாரிகள் தகவல்
3 மணிநேர மின்தடை
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் கணேஷ்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு வந்தது. நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதற்கும் முன்பே இந்த நிலை இருந்தது. கிராமத்தில் இரவில் மின்தடை ஏற்பட்டால் குறைந்தபட்சம் 2 முதல் 3 மணிநேரத்துக்கு பிறகே மின்சாரம் வந்தது. ஆனால் அதேநேரத்தில் பக்கத்து கிராமங்களில் மின்சாரம் இருந்தது.
கிராம மக்களுக்கு சந்தேகம்
இதனால் கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. யாரோ ஒருவர் தான் திருட்டுதனமாக மின்சாரத்தை தடை செய்வதாக நினைத்தனர். மேலும் அந்த நபரை கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று கிராமத்தில் மின்சாரம் தடைப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மின்தடையை ஏற்படுத்திய நபர் யார் என்பது பற்றி விசாரித்தனர்.
பிடிபட்ட் எலக்ட்ரீசியன்
அப்போது கிராமத்தில் உள்ள ஒரு எலக்ட்ரீசியன் மின்சாரத்தை துண்டித்துவிட்டு அங்குள்ள அரசுபள்ளியை நோக்கி செல்வது தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள் அரசு பள்ளி நோக்கி சென்றனர். அங்கு எலக்ட்ரீசியன் தனது காதலியை சந்தித்து இருட்டுக்குள் மகிழ்ச்சியாக இருந்தார். இதையடுத்து எலக்ட்ரீசியன் மற்றும் அவரது காதலியை கிராம மக்கள் கையும், களவுமாக பிடித்தனர்.
கிராமத்தில் திருமணம்
இதையடுத்து எலக்டரீசியனை ஊர்வலமாக அழைத்து வந்து மின்சார துண்டிப்பை சரிசெய்ய வைத்தனர். பிறகு கிராமத்தில் உள்ள கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். சமீபத்தில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மின்தடையால் திருமண விழாக்களில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் ஒரே நேரத்தில் 4 திருமணங்கள் நடந்தன. அப்போது மின்சாரம் தடைப்பட்ட நிலையில் 2 மணப்பெண்கள் மாறி வேறோருவர்களுடன் சேர்ந்து திருமண சடங்குகளை செய்தனர். . இந்நிலையி்ல தான் பீகாரில் மின்தடை ஏற்படுத்தி காதலியை சந்திக்க சென்றவருக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.