காரை ஓவர்டேக் செய்ததற்காக 19 வயது மாணவரை சுட்டுக் கொன்ற பீகார் எம்.எல்.சி.யின் மகன் கைது
கயா: பீகாரில் தனது காரை முந்திச் சென்றதற்காக 19 வயது மாணவனை சுட்டுக் கொன்ற சட்ட மேலவை உறுப்பினர் மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் கயாவில் தனது காரை முந்திச் சென்ற காரணத்திற்காக 19 வயது மாணவன் ஆதித்யா சச்தேவாவை சட்டமேலவை உறுப்பினர் மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ்(24) சுட்டுக் கொலை செய்தார்.

சனிக்கிழமை இரவு நடந்த சம்பவத்தை அடுத்து ராக்கி தலைமறைவாகிவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராக்கியை தேடி வந்தனர். இதற்கிடையே மனோரமா தேவியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு கயா அருகே உள்ள கம்பெனி ஒன்றில் பதுங்கியிருந்த ராக்கியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் ராக்கி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீஸ் அதிகாரி கரிமா மாலிக் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் முன்பு முகத்தை மூடியபடி அழைத்து வரப்பட்ட ராக்கி கூறுகையில், நான் தலைமறைவாக இல்லை. நான் டெல்லியில் இருந்தேன். என் தாய் அழைத்ததால் வந்தேன். நான் யாரையும் சுடவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications