Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடிவுக்கு வந்த நிதிஷ் ஆட்சி.. பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்! யார் இந்த சாம்ராட் சவுத்ரி

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக இருந்த நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகத் தேர்வாகியுள்ளார்.

பீகார் அரசியலில் "மாற்றம் ஒன்றே மாறாதது" இது ஒரு தினசரி நிகழ்வு! பல அதிரடித் திருப்பங்கள் அங்கு அசால்டாகவே நடக்கும். இதற்கிடையே பீகாரின் புதிய முதலமைச்சராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு இதுவரை நடந்த சம்பவங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

Bihar New Chief Minister Samrat Choudhary Elected as First BJP CM After Nitish Kumar Resigns

பீகார் தேர்தல்

கடந்த 2025 நவம்பரில் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமார் - பாஜக உள்ளடங்கிய என்டிஏ கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களை அள்ளி ஒரு இமாலய வெற்றியை ருசித்தது. மொத்தம் உள்ள 243 இடங்களில், பாஜக 89 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க, நிதிஷ் குமாரின் ஜேடியு 85 இடங்களைப் பிடித்து இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. மறுபுறம், தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி வெறும் 25 இடங்களோடு பலத்த சரிவைச் சந்தித்தது.

தேர்தல் முடிந்த கையோடு நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றாலும், அப்போதே முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் மாற்றப்படலாம் என்று செய்திகள் உலா வரத் தொடங்கின. இந்தச் சூழலில் தான் வெறும் ஐந்தே மாதங்களில் இப்போது கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிதிஷ் குமார் ராஜ்யசபாவுக்கு செல்வதாக அறிவித்தார்..

நிதிஷ்குமார்

பீகார் சட்டசபை, மேலவை, நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா என அனைத்திலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் ராஜ்யசபா மட்டும் மிச்சம் இருந்ததாலேயே உறுப்பினராகத் தேர்வானதாக நிதிஷ் கூறியிருந்தார். இருப்பினும், வெளிப்படையாக அவர் இப்படி சொன்னாலும் கூட பாஜகவின் அழுத்தமே பிரதான காரணம் எனச் சொல்லப்பட்டது.

சாம்ராட் சவுத்ரி

இந்தச் சூழலில் தான் பீகார் பாஜகவின் முகமாக அறியப்படும் சாம்ராட் சவுத்ரி அங்கு முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பீகாரில் 'நிதிஷ் சகாப்தம்' மெல்ல முடிவுக்கு வந்து, பாஜகவின் நேரடி ஆட்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது! பீகார் பாஜக மாநிலத் தலைவராக இந்த சவுத்ரி, நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணியில் துணை முதலமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இடையில் 2022 ஆகஸ்ட் மாதம், அப்போது நிதிஷ் குமார் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறி, லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சியுடன் இணைந்து 'மகாகத்பந்தன்' ஆட்சியை அமைத்தார். அப்போது "நிதிஷ் குமாரை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை எனது தலைப்பாகையைக் கழற்ற மாட்டேன்" எனச் சபதம் எடுத்து, பீகார் அரசியலில் பரபரப்பைக் கிளப்பியவர் தான் இந்த சாம்ராட் சவுத்ரி.

விட்டுக்கொடுத்த நிதிஷ்

பலமுறை பல கூட்டணிகளுக்குத் தாவிய நிதிஷ் குமார், இந்த முறை முதலமைச்சர் பதவியை பாஜகவிடம் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். 2029 பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பீகாரில் ஒரு வலுவான ஓபிசி முகத்தை முதலமைச்சராக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாகவே சாம்ராட் சவுத்ரியின் இந்த புரமோஷன் நடந்துள்ளது.

நாளை பாட்னாவில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் அவர் முதலமைச்சராகப் பதவியேற்க வாய்ப்புள்ளது. அவருடன் இரண்டு துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதில் ஒரு துணை முதல்வர் பதவி நிதிஷ் கட்சிக்குச் செல்லும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+