பீகார்: விடிஞ்சா நிதிஷ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு- 6 ஜேடியூ எம்எல்ஏக்கள் திடீர் மாயம்!
பாட்னா: பீகார் மாநில சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. இந்த நிலையில் நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் 2020-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக- நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.

இதனையடுத்து நிதிஷ்குமாரின் ஜேடியூ-காங்கிரஸ்- ஆர்ஜேடி-இடதுசாரிகள் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த கூட்டணியில் இருந்தும் அண்மையில் நிதிஷ்குமார் விலகி மீண்டும் பாஜக அணியில் இணைந்தார்.
இதனையடுத்து கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை பதவியை ராஜினாமா செய்துவிட்டு 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார். இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் அரசு மீது நாளை பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்கள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள். தற்போதைய நிலையில் பீகார் சட்டசபையில் கட்சிகள் பலம்:
நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவு: 127
பாஜக - 78
ஹெச்.ஏ.எம்.எஸ்-4
நிதிஷ்குமாரின் ஜேடியூ- 45
எதிர்க்கட்சிகள்: 114
லாலுவின் ஆர்ஜேடி- 79
காங்கிரஸ் -19
இடதுசாரிகள் - 16
பீகாரில் பெரும்பான்மையைவிட 5 எம்.எல்.ஏக்கள் கூடுதலாக நிதிஷ் அரசுக்கு இருந்து வருகிறது. இருந்த போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துவிடக் கூடும் என்பதால் அவர்கள் அத்தனை பேரையும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளது டெல்லி மேலிடம்.
இந்த பின்னணியில் திடீரென நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சியில் 6 எம்.எல்.ஏக்கள் மாயமாகி உள்ளனர். இந்த 6 பேரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கூறப்படுகிறது. விடிந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் திடீரென ஆளும் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் காணாமல் போயிருப்பது முதல்வர் நிதிஷ்குமார் தரப்பை ரொம்பவே ஆடிப் போக வைத்துள்ளதாம்.
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க ஜேடியூவில் 14 எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது 6 எம்.எல்.ஏக்கள் தொடர்பில் இல்லை என்பதால் நிதிஷ்குமார் அரசு நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பி பிழைக்குமா? என்பது கேள்விக் குறியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications