உலகின் மிகப்பெரிய இந்து கோவிலை கட்ட நிலம் வழங்கிய பீகார் முஸ்லீம்கள்
பாட்னா: உலகின் மிகப்பெரிய இந்து கோவிலை கட்ட பீகாரில் உள்ள முஸ்லீம்கள் நிலத்தை தானமாக அளித்துள்ளனர்.
பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா அருகே இருக்கும் ஜானகி நகரில் உலகின் மிகப்பெரிய கோவிலை கட்ட உள்ளனர். ரூ.500 கோடி செலவில் கட்டப்படும் அந்த கோவிலின் கட்டுமானப்பணிகள் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது.

இந்த கோவிலை கட்டும் பணியை மேற்கொள்ள உள்ள பாட்னாவைச் சேர்ந்த மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் செயலாளரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ஆச்சார்யா கிஷோர் குனால் கூறுகையில்,
உலகின் மிகப்பெரிய இந்து கோவிலை கட்ட பீகார் முஸ்லீம்கள் நிலத்தை தானமாக அளித்துள்ளனர். அவர்களின் உதவி இல்லாமல் இந்த கோவிலை கட்ட முடியாது. சில முஸ்லீம்கள் நிலத்தை தானமாக அளித்தனர். சிலர் குறைந்த விலைக்கு விற்றனர். அவர்கள் நிலத்தை தராமல் இருந்திருந்தால் கோவில் கட்டும் பணி தாமதமாகியிருக்கும்.
நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் கோவில் கட்டப்படும். விராட் ராமாயன் மந்திர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த கோவில் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலை விட உயரமாக கட்டப்படும். கோவிலில் 20 ஆயிரம் பக்தர்கள் அமரும் வகையில் அறை கட்டப்பட உள்ளது.
கோவிலை கட்ட 200 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அதில் 50 ஏக்கர் நிலத்தை இந்துக்களும், முஸ்லீம்களும் தானமாக அளித்தனர். மீதமுள்ள நிலத்தை விலை கொடுத்து வாங்கினோம் என்றார்.












Click it and Unblock the Notifications