11 குற்றவாளிகள் விடுதலை.. பில்கிஸ் பானுவின் கடைசி நம்பிக்கை! வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
குஜராத்: 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதித்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிந்ததை தொடர்ந்து இந்துத்துவ அமைப்பினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூர தாக்குதல்களை நடத்தினர்.
2 வாரங்கள் தொடர்ந்த நடந்த கலவரத்தில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

பில்கிஸ் பானு
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய கலவரம் மார்ச் மாதம் வரை தொடர்ந்தது. குறிப்பாக அங்குள்ள தஹோத் மாவட்டத்தில் இருக்கும் ரந்திக்புர் கிராமத்தில் வெடித்த கலவரத்தின்போது 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் 19 வயது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு, பெண் குழந்தை மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 15 பேரை கொடூரமாக தாக்கியது. இதில் குடும்பத்தினர் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

படுகொலையும் பலாத்காரமும்
ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, அவருடைய தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கலவர கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். நாட்டையே அதிர வைத்த கொடும் குற்றச்செயல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. குஜராத்தின் அகமதாபாத்தில் இதன் முதல் கட்ட விசாரணை தொடங்கப்பட்டது.

நீதிமன்றம் விதித்த தண்டனை
இந்த நிலையில் சாட்சிகளை அழித்ததாகவும், சாட்சியங்களை சேதம் செய்ததாகவும் கூறி மும்பைக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 2018 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

11 பேரும் விடுதலை
இந்த நிலையில் பில்கிஸ் பானு வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கும் குஜராத் மாநில அரசு பொதுமன்னிப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை செய்ய பரிந்துரைத்தது. 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த காரணத்தாலும், குற்ற தன்மையை கருத்தில் கொண்டும் அவர்களை விடுதலை செய்திட ஆணை பிறப்பித்தது.

ஆரத்தி எடுத்து வரவேற்பு
இதனை தொடர்ந்து 11 குற்றவாளிகள் கடந்த ஆகஸ்டு மாதம் கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அப்போது குற்றவாளிகளுக்கு ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையானவர்கள் வேறு சில குற்ற செயல்களிலும் சிக்கினர்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்த நிலையில், 11 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. அதேபோல் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு கடந்த நவம்பர் 30 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அஜய் ரஸ்டோகி மற்றும் பெலா எம் திரிவேதி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், பெலா எம் திரிவேதி வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதீமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications