முன்னாள் அமெரிக்க தூதரக கட்டிடத்தை ரூ.750 கோடிக்கு வாங்கிய தொழில் அதிபர் பூனாவாலா
மும்பை: மருந்து தொழிற்சாலை அதிபர் சைரஸ் பூனாவாலா மும்பையில் உள்ள லிங்கன் ஹவுஸ் என்ற பங்களாவை ரூ.750 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.
மும்பையில் அமெரிக்க தூதரகம் மஹாராஜா காலத்து பெரிய பங்களாவில் செயல்பட்டு வந்தது. அந்த பங்களாவிற்கு பின்னர் லிங்கன் ஹவுஸ் என்று பெயரிடப்பட்டது. 1957ம் ஆண்டில் இருந்து அங்கு செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து காலியான லிங்கன் ஹவுஸை விற்பனை செய்வதாக அமெரிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் பங்களாவின் விலையை கேட்டுவிட்டு பலரும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர். இதனால் அந்த பங்களா கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனை ஆகாமல் இருந்தது.

பூனாவாலா
பாம்பு கடிக்கு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ள பெரும் பணக்காரரான சைரஸ் பூனாவால் லிங்கன் ஹவுஸை ரூ.750 கோடி கொடுத்து தற்போது வாங்கியுள்ளார். இதுவரை இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட பங்களா என்றால் அது லிங்கன் ஹவுஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிர்லா
முன்னதாக கடந்த வாரம் ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார் மங்கலம் பிர்லா மும்பையில் உள்ள ஜாட்டியா ஹவுஸ் பங்களாவை ரூ. 425 கோடிக்கு வாங்கினார்.

கோத்ரேஜ்
கடந்த ஆண்டு கோத்ரேஜ் குடும்பத்தைச் சேர்ந்த மெஹ்ராங்கிர் மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோமி பாபாவின் வீட்டை ரூ.372 கோடிக்கு வாங்கினார்.

ஜிந்தால்
கடந்த 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள மஹேஸ்வரி ஹவுஸ் பங்களாவை ஜே.எஸ்.டபுள்யூ. ஸ்டீல் அதிபர் சஜ்ஜன் ஜிந்தால் ரூ.400 கோடிக்கு வாங்கினார்.

பங்களாக்கள்
பூனாவாலா, பிர்லா, மெஹ்ராங்கிர் மற்றும் சஜ்ஜன் ஜிந்தால் ஆகியோர் வாங்கிய பங்களாக்கள் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications