பறவை காய்ச்சல் பீதியால் மீன், மட்டனுக்கு மாறும் அசைவ பிரியர்கள்
பறவை காய்ச்சல் பீதி காரணமாக தமிழகத்தில் கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன், மட்டன், நாட்டுக்கோழிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் வாத்துகளுக்கு பரவிய பறவைக் காய்ச்சல் பிற கோழிகளுக்கும் பரவியிருக்கலாம் என்பதால் எச்சரிக்கை நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் கறிக்கோழி வாகனங்களும், இங்கிருந்து அங்கு செல்லும் வாகனங்களும் மருந்து தெளிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.

இந்நிலையில் பறவை காய்ச்சல் பீதி மக்களிடம் பரவியுள்ளது. ஹோட்டல்களில் பெரும் பாலும் கறிக்கோழிகள் மூலம் பிரியாணி செய்யப்பட்டு வருகிறது. இவ்வகையில் தயாரிக்கப்படும் பிரியாணி விலை குறைவு என்பதால் அதைத்தான் பெரும்பாலானோர் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். பறவை காய்ச்சல் பீதியால் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதை தற்போது அசைவ பிரியர்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர்.
இதனால் கடைகளில் மட்டன் பிரியாணிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கோழி விற்பனை பாதிப்பை அடுத்து, ஆட்டு இறைச்சிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் கிலோவுக்கு ரூ.20 வரை கடைக்காரர்கள் கூட்டியுள்ளனர். எனவே கிலோ ரூ.480க்கு விற்கப்பட்டு வந்த மட்டன் ரூ.500 ஆக விற்கப்படுகிறது.
நாட்டுக்கோழி ரூ.300 முதல் ரூ.350வரையில் விற்பனையாகிறது. ஏற்கனவே கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருப்பதால் கோழி விற்பனை குறையத்தொடங்கியது. பறவை காய்ச்சல் பிரச்சினையால் கறிக்கோழி விற்பனை மளமளவென குறையத்தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications