கேரளாவில் வேகமாக பரவுது பறவைக் காய்ச்சல்! 17,000 வாத்துகள் பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் உம்மன் சாண்டி உயர் மட்ட ஆலோசனை நடத்தி காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.
கேரளாவின் குட்டநாடு மற்றும் அதன் பக்கத்து பகுதிகளில் கடந்த வாரம் சுமார் 17 ஆயிரம் வாத்துகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. பறவை காய்ச்சல் தாக்கி அவை இறந்திருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமா, சம்பவ இடத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இறைச்சிக்காக கோழிகளை கொள்முதல் செய்ய கூடாது என்று மாநில கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டது.

உயிரிழந்த வாத்துகளின் இறைச்சி மாதிரிகள் போபாலிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், பறவை காய்ச்சல் காரணமாகவே வாத்துகள் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டி உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து நோய் தடுப்பு குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
குட்டநாடு பகுதி தண்ணீர் பாயும் செழிப்பான பகுதி. பிற பகுதியில் இருந்து நோய் வைரஸ் தண்ணீர் மூலம் இங்கு வந்திருக்கலாம் என்று கேரள அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். குமரகம் பறவைகள் சரணாலயமும் இப்பகுதியில்தான் உள்ளதால், பறவைகள் சரணாலயத்திலுள்ள பறவைகளுக்கு இந்த நோய் பரவியுள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications