ஆட்சி அமைப்பதில் தொடரும் குழப்பம்- டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?
டெல்லி: டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
70 தொகுதிகள் கொண்டது டெல்லி சட்டசபை. இம்மாநிலத்துக்கான தேர்தலில் பாஜக 31 இடங்களையும் அம் ஆத்மி கட்சி 28 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சியானது 8 இடங்களையே கைப்பற்றியது.
பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளத்துக்கு ஓர் இடம் கிடைத்தது. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேட்சை வேட்பாளருக்கு தலா ஓர் இடம் கிடைத்தது. ஆட்சி அமைக்க 36 உறுப்பினர்கள் தேவை. ஆனால், எந்த ஒரு கட்சிக்கும் 36 இடங்கள் கிடைக்கவில்லை.

இதனால் அடுத்து ஆட்சி அமைப்போம் என்ற கனவில் இருந்த பாஜக கவலை அடைந்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்காக குறுக்கு வழிகளைக் கையாள மாட்டோம் என பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.
இந் நிலையில், பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினர். காஜியாபாதில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜரிவால் இல்லத்தில் இக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்குக் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ், நாங்கள் ஆட்சி அமைக்கப் போவதில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சிக்குரிய பணியை ஆற்றுவோம். பெரும்பான்மை பலம் உள்ள கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டும். எங்களுக்கு அந்த பலம் இல்லை. அதே நேரத்தில் அதிகத் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள ஒரு கட்சி, எங்களை ஆட்சி அமைக்கும்படி கூறுவது புதிதாகவும், வியப்பாகவும் இருக்கிறது என்றார்.
இத்தகைய குழப்பமான சூழலில் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தக் கூடும் என்றே தெரிகிறது. தற்போது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு லோக்சபா தேர்தலுடன் மீண்டும் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications