மத்திய படையினர் வடிவில் வாக்காளர்களை மூளைச்சலவை செய்யும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.. மம்தா பகீர் புகார்
பர்கானா: துணை ராணுவத்தினர் உருவத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், மேற்குவங்கத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக மம்தா பானர்ஜி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
6-ம் கட்டமாக நேற்று மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில் வரும் மே19-ம் தேதி அம்மாநிலத்தில் மீதமுள்ள 9 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து பர்கானா மாவட்டத்துக்குட்பட்ட பசந்தி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதில் பேசிய அவர், பாதுகாப்பு படையினரின் சீருடையை அணிந்து கொண்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஐயயோ கடைசி நேரத்தில் டயரை காணோம்.. முன்பக்கம் உரசியபடி தரையிறங்கிய விமானம்.. பயணிகள் பீதி
தமக்கு மத்திய பாதுகாப்பு படையினர் மீது தனி மதிப்பு உள்ளது. அவர்களை அவமதிக்க நினைக்கவில்லை. ஆனால் அவர்களை கருவியாக வைத்து வாக்காளர்களை கடைசி நேரத்தில் மூளைச்சலவை செய்ய, மத்திய அரசு பயன்படுத்துவதாக புகார் தெரிவித்தார். தோற்று விடுவோம் என்ற பயத்தில் மேற்குவங்கத்தில் மோடி அரசு பல ஏமாற்று வேலைகளை செய்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக தான் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்துகிறோம் என்ற பெயரில், பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை இங்கு குவித்துள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினர், வரிசையில் நிற்கும் வாக்காளர்களிடம் பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டும் என வெளிப்படையாகவே கூறுவதாக ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன.
பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்வதுதான் மத்திய பாதுகாப்பு படையினரின் வேலையா, இவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு வெட்கமாக இல்லையா என வினவிய மம்தா, இன்று மோடி ஆட்சியில் இருப்பதால் இவ்வாறு நடக்கலாம்.
ஆனால் மாற்றம் ஏற்பட்டு வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்தால் உங்கள் நிலை என்னவாகும் என யோசித்தீர்களா என கேள்வி எழுப்பினார். மம்தா பார்ஜியின் இந்த பரபரப்பு குற்றசாட்டை பாரதிய ஜனதா திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.