பாஜகவின் “பிராமண லாபி”.. ராஜஸ்தானில் சாதி அரசியலை மலைபோல் நம்பும் தாமரை! யாரு மெஜாரிட்டி?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், பிராமண சாதி வாக்குகளை மலைபோல் நம்பும் பாஜக, அந்த சமுதாயத்தை சேர்ந்தவரை மாநில தலைவராக நியமித்து களம் கண்டது. அதற்கு வெற்றி கிடைக்குமா என்று பார்ப்போம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜகவை ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு இறுதியுடன் அவரது ஆட்சிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ராஜஸ்தானில் நடைபெற்றது.

கர்ன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததால் 199 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 75.45 சதவீத வாக்குகள் பதிவாகின. டிசம்பர் 3 ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ராஜஸ்தானை பொறுத்தவரை 4 சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்களை மையப்படுத்தியே ஒவ்வொரு தேர்தலும் நடந்து வருகிறது.
குறிப்பாக பாஜகவும் தங்களுக்கு எந்த சாதி ரீதியில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதோ அதை இழக்கக்கூடாது என்ற நோக்கில் தேர்தலை எதிர்கொண்டது. அதன் ஒரு பகுதியாகவே கடந்த மார்ச் மாதம் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பாஜக எம்பி சந்திர பிரகாஷ் ஜோஷியை அம்மாநில தலைவராக தேர்வு செய்தது பாஜக. ராஜஸ்தானை பொறுத்தவரை ராஜ்புட் சமூகம் 10 சதவீதமும், ஜெயின்கள் 8 சதவீதமும், ஜாட் சமூகத்தினர் 7-8 சதவீதமும், பிராமணர்கள் 7 சதவீதமும், மீனா 6 சதவீதமும் உள்ளன.
மத அடிப்படையில் 77.98 சதவீதம் வசிக்கும் இந்துக்களுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் 17.91 சதவீதமும், ஜெயின்கள் 2.67 சதவீதமும் உள்ளார்கள். ராஜ்புட், ஜாட் சமுதாயத்தினர் அதிகளவில் ராஜஸ்தானில் வசித்தாலும் கடந்த 30 ஆண்டுகளில் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களே அங்கு அதிகளவில் முதலமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். 4 முதலமைச்சர்கள் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்து உள்ளனர்.
ராஜ்புட், ஜாட் வாக்குகளை காங்கிரஸ் கட்சி பிரிக்கும் நிலையில், பிராமண வாக்குகளை மொத்தமாக கைப்பற்ற ராஜஸ்தான் பாஜக மாநில தலைவராக இருந்த ஜாட் சமுதாயத்தை சேர்ந்த சதீஷ் பூனியாவை நீக்கிவிட்டு பிராமணரை நியமித்தது. ராஜஸ்தானில் பிராமணர்களை விட அதிகளவில் ஜாட் சமுதாயத்தினர் வசித்தாலும் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கூட இதுவரை ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் ஆனதில்லை. ராஜஸ்தான் பாஜகவில் பிராமணர்களின் முகமாக அறியப்பட்ட 6 முறை சட்டமன்ற உறுப்பினரான கான்ஷியாம் திவாரி, முன்னாள் முதலமைச்சர் வசுந்திரா ராஜே உடனான மோதலால் கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
அவரால் பிரியப்போகும் வாக்குகளை சரிகட்டவே 47 வயதே ஆன ஜோஷியை பாஜக மாநிலத் தலைவராக தேசிய தலைமை அறிவித்தது. இவர் அல்லாமல், ராஜஸ்தானை சேர்ந்த மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்னவும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்தான். அஷ்விணி வைஷ்ணவ் மத்திய அரசு அதிகாரியாக பதவி வகித்து அதன் பின்னர் மத்திய அமைச்சரானவர். ஆனால், இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பணியாற்றிய ஜோஷி, பிராமண மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் வெளிப்படையாக ஜாதி பெருமைகளை பேசியவர். இவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கி பாஜக தலைமை அலங்கரித்து இருப்பது அவர் சார்ந்த சமுதாய ஆதரவை பெறுவதற்காகவே என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications