மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதிரடி மோடில் பாஜக இறங்கியுள்ளது. நேற்று தான் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வந்த சூழலில், இன்றே பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 144 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு உடன் மேற்கு வங்கம், கேரளா உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதற்கிடையே மேற்கு வங்கத்தில் இந்த முறை இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த முறை 8 கட்டமாகத் தேர்தல் நடந்த நிலையில், இந்த முறை இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.

வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் முதலாம் கட்ட தேர்தலில் மாநிலத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. முதலாம் கட்டத்தில் 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. அடுத்து ஏப்ரல் 29ம் தேதி மாநிலத்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மீதமுள்ள 142 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மற்ற மாநிலங்களைப் போலவே மேற்கு வங்கத்திலும் மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த முறை எப்படியாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. இதனால் ஆரம்பத்திலேயே அதிரடி மோடில் இறங்கிவிட்டது. அதன்படி மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான 144 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக இன்று திங்கள்கிழமை வெளியிட்டது. நேற்றைய தினம் தான் தேர்தல் அறிவிப்பு வெளியான சூழலில், இன்றைய தினமே பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில், அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.. வட மற்றும் தென் வங்காளம் முழுவதும் உள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் நந்திகிராமில் இருந்து பாஜகவின் முக்கிய முகமான சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். அசன்சோல் தக்ஷினில் இருந்து அக்னிமித்ரா பால், ஷிப்பூரில் இருந்து நடிகர்-அரசியல்வாதி ருத்ரனில் கோஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications