அமளி துமளி- சண்டை மன்றங்களான குஜராத், ஒடிஷா சட்டசபைகள்- பாஜக அமைச்சர் படுகாயம்!
குஜராத் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டசபைகள் இன்று அமளிகாடானது. குஜராத் சட்டசபை தகராறில் காங், பாஜக எம்.எல்.ஏ.க்கள் காயமடைந்தனர்.
காந்திநகர்/ புவனேஷ்வர்: குஜராத் மற்றும் ஒடிஷா மாநில சட்டசபைகளில் இன்று பயங்கர அமளி ஏற்பட்டது. குஜராத் சட்டசபையில் பாஜக பெண் எம்.எல்.ஏ.வை காங்கிரஸ் எம்.எல்.ஏ தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தமிழக சட்டசபையில் மார்ஷல்கள் சீருடையில் நுழைந்த போலீஸ் உயர் அதிகாரிகள் திமுக எம்.எல்.ஏக்களைத் தாக்கிய பஞ்சாயத்து இன்னும் ஓயவில்லை. இன்று ஒரே நாளில் குஜராத் மற்றும் ஒடிஷா சட்டசபைகள் அமளி துமளி ஏற்பட்டு அடிதடி அரங்கேறியிருக்கிறது.
குஜராத் சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரேஷ் தனானி கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு வேளாண் துறை அமைச்சர் சிமன்பாய் சபரியா பதில் அளித்துக் கொண்டிருந்தார். 1995-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் குஜராத் விவசாயிகள் நிலைமை குறித்து அவர் விவரித்துக் கொண்டிருந்தார்.

முகத்தில் குத்து
இதில் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரேஷ் தனானி, அமைச்சர் சிமன்பாயிடம் இருந்த பேப்பர்களை பிடுங்கி கிழித்து எறிந்து அவரை தாக்க முயன்றார். அப்போது திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ. பல்தேவ்ஜி தாக்கூர் எழுந்து பாஜக எம்.எல்.ஏக்கள் இருக்கை நோக்கி ஓடி இணை அமைச்சரும் பாஜக பெண் எம்.எல்.ஏவுமான நிர்மலா வத்வானி முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டு கீழே தள்ளிவிட்டார்.

எங்களைத் தாக்கினாங்க...
இதில் நிர்மலா வத்வானி கை முறிந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, பாஜக எம்.எல்.ஏக்கள்தான் எங்களைத் தாக்க வந்தனர். சட்டசபை வீடியோ காட்சிகளைப் பார்த்தாலே தெரியும் என மறுப்பு தெரிவித்துள்ளது. தாக்கியதாக கூறப்படும் பல்தேவ்ஜி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கெளதம்பாய் இருவரும் கை, கால்களில் கட்டுப் போட்டு தாங்கள் தாக்கப்பட்டோம் என கூறினர்.

ஜாதி மோதல் அபாயம்
அத்துடன் படேல் மற்றும் தாக்கூர் ஜாதி எம்.எல்.ஏக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர் எனவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதனால் சட்டசபை மோதல் ஜாதி ரீதியான வன்முறையாக வெடிக்கும் நிலை உருவாகி உள்ளது.

ஒடிஷாவிலும்
இதேபோல் ஒடிஷா மாநில சட்டசபையும் இன்று அமளி காடானது. பஞ்சாயத்து தேர்தல் வன்முறைகளை முன்வைத்து காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏக்களை எழுப்பியதால் பெரும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் சபையை நடத்த முடியாமல் ஒத்திவைக்க நேரிட்டது.












Click it and Unblock the Notifications